பக்கம் எண் :

100தமிழ் வரலாறு

குறிஞ்சியடுத்த முல்லை நிலத்திற்குப் பரவிய போது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப் பொருள்கள்பற்றிய சொற்கள் பிறந்தன. அதன்பின் முல்லையடுத்த மருதநிலத்திற்குப் பரவியபோது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப் பொருள்கள்பற்றிய சொற்கள் தோன்றின. அதன்பின், மருதத்தை யடுத்த நெய்தல்நிலத்திற்கு மருத நகர் மீன்பிடியாளர் குடியேறி வாழ்ந்தபோது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப்பொருள்கள்பற்றிய சொற்கள் எழுந்தன.

குறிஞ்சியும் முல்லையும் முதுவேனிலில் வறண்ட நிலையே பாலையாதலின், அந் நிலத்துப் பிற்காலத்துண்டான சொற்க ளெல்லாம் தொழிலும் கருவியும் பழக்கவழக்கமும் கொள்கையும் பற்றியனவே.

குறிஞ்சியடுத்தும் முல்லையடுத்தும் நெய்தலிருக்கவுங் கூடுமா யினும், குமரிக்கண்டத் தமிழர் குறிஞ்சியினின்று ஆற்றையொட் டியே படிப்படியாகப் பரவியதாகத் தெரிவதால், மருதநிலைக்குப் பின்பே நெய்தல் சென்றிருத்தல் வேண்டும். முதற்கால மாந்தர் செயற்கை நீர்நிலை அமைக்கத் தெரியாதிருந்த காலத்தில், இயற்கை நீர்நிலையான ஆற்றையே நம்பியிருந்தனர். இற்றைத் தமிழகத்திற் போன்றே பழம்பாண்டி நாடான குமரிக்கண்டத்திலும், பெருமலைத் தொடர்கள் மேல்கோடியிலே இருந்தன. அவற்றினின்று பஃறுளியும் குமரியும் போன்ற ஆற்றை யடுத்தே மக்கள் பரவின், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற முறையிலேயே நிலங்களை அடைந்திருக்க முடியும். இந் நிலைமை இற்றைத் தமிழகத்திற்கும் ஏற்றதாதல் காண்க. முந்தியல் மாந்தர் முந்நிலை நாகரிகத்தையும் முறையே அடைதற் கேற்றவாறு, குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய முந்நிலமும் அடுத்தடுத்திருத்தல் தமிழ் நாட்டிற்போல் வேறெங் கணுமில்லை.

வெற்பன், குறும்பொறைநாடன், ஊரன், துறைவன், விடலை என்னும் ஐந்திணைத் தனியூர்த் தலைவராட்சிக்குப் பின், பலவூர்க் கிழமை பூண்ட வேளிரின் குறுநில ஆட்சி வந்து, அதன்பின் சேர சோழ பாண்டியரின் பெருநிலை ஆட்சி தோன்றியபோது, தமிழ் ஐந்திணைச் சொற்களும் சேர்ந்த பெருவள மொழியாயிற்று, மருதநிலத்தில் நகர்கள் தோன்றிய நாகரிகம் வளர்ந்து பல்வேறு தொழில்களும் கலைகளும் அறிவியல்களும் ஏற்பட்ட பின், தமிழ் மேன்மேலும் வளர்ந்தோங்கிற்று.

தமிழ் ஐந்திணை மக்கட்கும் பொதுவாயிருக்கும் இஃ தொன்றே, தமிழரெல்லாம் ஓரினமென்றும், தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வாழ்ந்து வருபவரென்றும், தொழில் தழுவாது பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினையால் தூய