உயிர் பன்னிரண்டும் மெய்
பதினெட்டுமாகிய முப்பதெழுத்து களை மட்டும் கொண்ட
தொகுதிக்குக் குறுங்கணக்கு என்றும், அதனொடு 216
உயிர்மெய்யெழுத்துங்கொண்ட தொகுதிக்கு நெடுங்
கணக்கு என்றும் பெயர். பன்னீருயிரும் பதினெண்
மெய்யொடுங் கூட, உயிர்மெய் மொத்தம் இருநூற்றுப்
பதினாறாம்.
எல்லா மொழிகளிலும் உயிர்மெய்கள்
கலந்துதான் ஒலிக் கின்றன. ஆயின், அவற்றிற்குக்
கூட்டு வடிவம் முதன்முதல் அமைத் தவர் தமிழரே.
தமிழைப் பின்பற்றியே வடமொழியிலும் பிற
இந்திய மொழிகளிலும் உயிர்மெய் வடிவுகள்
அமைந்தன. இன்னும் மேலை ஆரியத்திலும்
சேமியத்திலும் உயிரும் மெய்யும் தனித்தனி
நிறுத்தப் படுகின்றன. அமெரிக்கு, சப்பான் முதலிய
ஒருசில மொழிகளில் மட்டும், தனி வரிக்கும் கூட்டு
வரிக்கும் இடைப்பட்ட அசைவரிகள் (Syllabaries)
ஏற்பட்டுள்ளன. அவையும் காலத்தாற்
பிற்பட்டவையே.
ஆய்தம் உயிரேறப்பெறாத
மெய்யாயினும், அதற்குத் தனி வடிவ முண்மைபற்றி
அதையும் ஓர் எழுத்தாகக் கொள்ளின்,
தமிழெழுத்துகள் மொத்தம் இருநூற்று
நாற்பத்தேழாம்.
பெயர்
செவிப்புலனான மொழியொலிகள்
கட்புலனான வரி வடிவில் எழுதப் பெற்றதனால்,
எழுத்தெனப் பெயர்பெற்றன. எழுத்து என்பது
வரிவடிவைக் குறிப்பின் தொழிலாகுபெயர்;
ஒலிவடிவைக் குறிப்பின் குறியாகுபெயர்.
"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்" (தொல். 1594)
என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி,
தமிழில் முதலிலக்கண நூலியற்றியவன், முற்றத்
துறந்தவனும் மெய்ப்பொருளறிவு நிரம்பிய வனுமான
முனிவனாவான்.
முனிதல் = (உலக வாழ்வை) வெறுத்தல்,
வெறுத்துத் துறத்தல். முனி, முனை என்னும் இரண்டும்
ஒரே சொல்லின் வேறுபட்ட வடிவமாம். முனிந்தவன்
முனிவன்; முனைந்தவன் முனைவன்.
"முனைவுமுனி வாகும்." (தொல். சொல். 386)
"இன்றீம் பாலை முனையின்" (பெரும்பாண். 180)
உலகிலுள்ள பொருள்கள் எல்லாம்,
உயிர், மெய், உயிர்மெய் என மூவகை. உயிர் தானே
இயங்கும் காற்று வடிவினது; மெய் உயிரின்
உதவியின்றி இயங்காத உடம்பு அல்லது கனப்பொருள்;
உயிர்மெய் உயிரொடு கூடிய உடம்பு. பிராணி
(பிராணனை
|