"தொல்லை வடிவின எல்லா வெழுத்தும்ஆண்(டு)
எய்தும் எகர ஒகரமெய் புள்ளி"
(நன். 98)
என்று 13ஆம் நூற்றாண்டுத்
தொடக்கத்தினதான நன்னூல் கூறுவதால், தமிழ்
ஏட்டெழுத்து தொன்றுதொட்டு வழங்கி வருவ தெனத்
துணியலாம். ‘ஆண்டு’ என்பது அக்காலத்து
(முற்காலத்தில்) என்று பொருள்படுவதாகும். எகர ஒகர
உயிரும் உயிர்மெய்யும் புள்ளிபெற்ற ஒன்றே,
பண்டையெழுத்தின் வேற்றுமை யெனக்
குறிப்பிடுகின்றார் பவணந்தி முனிவர். அவர்
காலத்திலும் அவை புள்ளிபெற்றனவெனின், அதை ஏன்
விதந்து கூறல் வேண்டும்? "தொல்லை வடிவின எல்லா
எழுத்தும்" என்பதிலேயே அது அடங்கிவிடுமே!
ஆதலால், அது உரையன்றென்க.
‘எய்தும்‘ என்பது வழக்கம் பற்றிய
காலவழுவமைதி.
பிற்காலத்தில் வேற்றரசு
வந்துவிட்டதனாலும், தமிழைக் காக்கும் பொறுப்புச்
செந்தமிழ்ப்புலவர் கையிலின்மையாலும்,
இலக்கணமறியா மாந்தர் ஏட்டிலும் கல்லிலும்
தப்புந்தவறுமாய் எழுதி வந்ததையே, வீரமா முனிவர்
முன்னை முறைப்படி திருத் தினார் என அறிக.
மாத்திரை
எழுத்துகட்கு மாத்திரை இன்னின்ன
அளவென்று குறிக்கப் பட்டிருப்பினும், கூப்பீடு
(விளி), ஒப்பாரி (புலம்பல்), இசைப்பாட்டு,
தெருவிற்பனை (பண்டமாற்று) முதலிய உலகியற்
செய்திகளில், அவை செவிப்பாடு, துயரம், இனிமை
முதலியனபற்றி, வேண்டுமளவு அல்லது இயன்ற அளவு
நீண்டொலிக்கும். அது அளபெடை எனப்படும்.
அளபெடுத்தல் - மாத்திரை கடந்தொலித்தல். உயிரள
பெடை, ஒற்றள பெடை என அளபெடை இருவகை. ஒற்று - மெய்.
உயிரளபெடையை வரிவடிவிற்
குறிக்கும்போது நெடிலின் பின்னும் குறிலின்
பின்னும், இயல்பாக வுரிய அளவிற்கு மேற்பட்ட
ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒவ்வொரு முறையாக,
அவ்வக் குறில் அல்லது இனக்குறில்கள் வடிவு
சேர்த்தெழுதப்படும். இசையில் அளபெடைக்
குறில்கள் தொடர்ந்தும் விட்டும் ஒலிக்கும்; பிற
வற்றில் தொடர்ந்தே ஒலிக்கும்.
ஒற்றளபெடையாயின், எல்லாவிடத்தும்,
கூடிய ஒவ்வோர் அரைமாத்திரைக்கும் ஒரு முறையாக
அவ்வம் மெய்வடிவே சேர்த் தெழுதப்படும்.
மெய்யெழுத்துகளுள் வல்லினம்
அளபெடுக்கா.
|