இடுகுறிப்பெயர் என்பதே தமிழில்
இல்லை. எல்லாப் பெயரும் கரணியப் பெயரே. இதன்
விளக்கத்தை என் "பண்டைத் தமிழ் நாகரிகமும்
பண்பாடும்" என்னும் நூலிற் காண்க.
"எல்லாச் சொல்லும் பொருள்குறித்
தனவே" (640)
என்னும் தொல்காப்பிய நூற்பாவையும்
நோக்குக. தமிழ் இயன்மொழியாதலாலும்
பொதுமக்கள் அமைத்த வழக்கு மொழி யாதலாலும்,
அதன் எல்லாச் சொற்களும் கரணியக் குறிகளாகவே
அமைந்துள்ளன. வடமொழி திரிமொழியாதலாலும்
புலமக்கள் அமைத்த செயற்கை நூன்மொழி யாதலாலும்,
அதில் இடுகுறிப் பெயர்கள் பல அமைந்துள்ளன.
ஒருவர் தம் மக்களுக்கிடும் ஆட்பெயர்
தெய்வப்பெயர்களும், தமக்குச் சிறந்தாரையும் தம்
வழிபடு தெய்வத்தையும் நினைவுகூர்தற்
பொருட்டேயென அறிக.
(2) வினைச்சொல்
விளை - வினை. ஒ.நோ: வளை - வனை, முளை -
முனை (கலித்.4)
விளைவது அல்லது விளைந்து பயன் (நன்று
அல்லது தீது) தருவது வினை.
"முற்பகற் செய்யிற் பிற்பகல்
விளையும்." (கொ.வே.
74)
"வினைவிளை கால மாதலின்" (சிலப். 16:148)
நல்வினை தீவினையைக் குறித்த
சிறப்புச்சொல், இலக்கணத் தில், நல்லதும்
தீயதும் இரண்டுமல்லதும் சிறியதும் பெரியதுமான
எல்லாச் செயல்கட்கும் பொதுப்பெயராயிற்று.
முதற்காலத்தில், வினைமுதனிலையே
இருதிணை ஐம்பால் மூவிட முக்காலப்
பொதுவினையாகவும் தொழிற்பெயராகவும்,
இருந்ததாகத் தெரிகின்றது. அக்காலத்து, முற்று
எச்சம் என்னும் வேறுபாடிருந்திருக்க முடியாது.
எ-டு : செய் = செய்கை. "பெருஞ்செய்
யாடவர்" (நெடுநல்.
171)
இல் = இல்லை. "பித்தரிற் பேதையார்
இல்" (நாலடி.
52)
"கரயுன்ன குட்டிக்கே பால் உள்ளு",
"வம்பனோடு வழுது நல்லு" என்னும் மலையாளப்
பழமொழிகளில் உள், நல் என்னும் குறிப்பு
வினைமுற்றடிகளே, உண்டு, நன்று என்று பொருள்படுதல்
|