பக்கம் எண் :

இயனிலைப் படலம்163

ஆகவே,

"தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத்
திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை" (நன்.142)

என்று பவணந்தியார் கூறியது, மொழியாராய்ச்சி மிக்க இக்காலத்திற் கேற்காதென அறிக.

இரண்டாம் மூன்றாம் நிலைகட்குரிய செய்து என்னும் வாய் பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்று, பிற்காலத்தில் சோழபாண்டி நாடுகளில் உலகவழக்கற்றுப்போய், செய்யுள் வழக்கில் தன்மை யிடத்திற்கே வரையறுக்கப்பட்டு, பன்மைக்கு உம்மீறு பெற்றது.

எ-டு : வந்து = வந்தேன், வந்தும் = வந்தோம்
கண்டு = கண்டேன், கண்டும் = கண்டோம்
சென்று = சென்றேன், சென்றும் = சென்றோம்

இடு என்னும் வினைபோன்றே, ஈ என்னும் வினையும் இறந்தகால வினையெச்சத்தோடு கூடித் துணைவினையாய் வரும்.

எ-டு: வந்திடு, வந்திடார்.
அறிந்தீயார்=அறியார் (புறம். 136).

ஈந்தார் என்னும் இறந்தகால வினைமுற்று ஈயினார் என்றும் வரும். ஒ. நோ: போந்தார், போயினார்.

அறிந்தீயினார்-அறிந்தீயினோர் (வினையாலணையும் பெயர்)

-அறிந்தீசினோர்-அறிந்திசினோர்.

என்றீயினார்-என்றீயினோர்-என்றீசினோர்-என்றிசினோர்.

யகரம் சகரமாகத் திரிவது இயல்பே.

எ-டு: ஈ+அல்=ஈயல்-ஈசல். இள்-(இய்)-ஈ-ஈயம்=எளிதாய் இளகும் கனியம் (உலோகம்). ஈயம்-ஸீஸம் (வ.). நெயவு-நெசவு. நேயம்-நேசம். பையன்-பயன்-பசன். வாயில்-வாயல்-வாசல். மயங்கு-மசங்கு.

பிற்காலத்தார், சொல்வரலா றறியாது அறிந்திசினோர், என்றி சினோர் என்பவற்றின் இசின் என்னும் இடைப்பகுதியைப் பிரித் தெடுத்து, அதை இறந்தகால இடைநிலை என்றனர்.

(2) நிகழ்கால வினை

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இருப்பதுபோல் திட்டமான எல்லைவரம்பு நிகழ்காலத்திற்கு இன்மையானும், மிகக் குறுகிய கால அளவில் நிகழ்காலத்திற்கே இடமின்மையானும்,