பக்கம் எண் :

178தமிழ் வரலாறு

5. வினைமுற்றின்பின் தான் என்னும் இடைச்சொல்.

எ-டு: வருவான்தான்.

இது சென்னைவழக்கு; அத்துணைச் சிறந்ததன்று.

6. வினைமுற்றின்பின் மன்ற என்னும் இடைச்சொல்.

எ-டு: "மடவை மன்ற" (நற். 94)

இது செய்யுள் வழக்கு.

(14) அருள்வினை

இறைவனும் முற்றத் துறந்த முழுமுனிவரும் செய்யும் செயலைக் குறிக்கும் வினை அருள்வினை. இது இறந்த கால வினையெச்சத்துடன் அருள் என்னும் துணைவினை சேர்ந்து வரும்.

எ-டு: எழுந்தருளினார், சொல்லியருளினார்
திருவாய்மலர்ந்தார், திருவுருக்கரந்தார்

என்பவற்றைத் திருவினை என்னலாம்.

(15) உதவிவினை

இறந்தகால வினையெச்சத்துடன் ஈ, தா, கொடு என்னும் வினைகளுள் ஒன்றுசேர்ந்து, இலவசச் செயலைக் குறிப்பது உதவி வினையாம்.

எ-டு: சென்றீ, வந்தீ, சொல்லித்தா, எழுதிக்கொடு.

எழுதிக்கொடுத்தல் கைம்மாறு கருதின் மற்பொருட்டு வினையாம்.

(16) ஆர்வவினை (Desiderative Verb)

வினைநிகழ்ச்சியின்மீது ஆர்வங்காட்டும் வினை ஆர்வ வினையாம். இது அறுவகையில் அமையும்.

1. ஏன் என்னும் இடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல் வினை.

எ-டு: வாருங்களேன்.

2. வேண்டும் என்னும் துணைவினையொடு கூடிய தொழிற் பெயர் அல்லது அகரவீற்று வினையெச்சம்.

எ-டு: தாங்கள் எங்கள் இல்லத்திற்குத் தப்பாது வரல் வேண்டும். இறைவ, நீ எங்ஙனமும் எனக்கு அருளவேண்டும்.

3. தன்மை வாழ்த்து.

எ-டு: யான் வாழ்க!