பக்கம் எண் :

இயனிலைப் படலம்179

4. ஏயிடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல்வினை.

எ-டு: நில்லுமே-நின்மே, வரட்டுமே.

5. ஓவிடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல்வினை.

எ-டு: மொழியுமோ-மொழிமோ.

6. தில்லிடைச்சொல்லோடு கூடிய வியங்கோள்வினை.

எ-டு: வருகதில்.

இவற்றுட் பின் மூன்றுஞ் செய்யுள் வழக்கென அறிக.

(17) அணியவினை

ஒன்றைச் செய்வதற்கு அணியமாய் (ஆயத்தமாய்) இருக்கும் நிலையைக் குறிக்கும் வினை அணிய வினையாம்.

இது இருவகையில் அமையும்.

1. அகரவீற்று வினையெச்சத்தின் போ என்னும் துணைவினை.

எ-டு: சொல்லப் போனான்.

2. நாலாம் வேற்றுமைத் தொழிற்பெயர் அல்லது அகர வீற்று வினையெச்சத்தின் பின் இரு என்னும் துணைவினை.

எ-டு: எழுதுவதற்கிருந்தான், எழுதவிருந்தான்.

(18) தொடர்ச்சிவினை

வினைத்தொடர்ச்சியைக் குறிக்கும் வினை தொடர்ச்சி வினையாம். இது இருவகையில் அமையும்.

1. இறந்தகால வினையெச்சத்தின் பின் அல்லது நிகழ்கால வினையெச்சத்தின் ( Present participle) பின் வா என்னும் துணைவினை.

எ-டு: எழுதிவருகிறான், எழுதிக்கொண்டு வருகிறான்.

2. ஏயிடைச்சொல்லொடு புணர்ந்த நிகழ்கால வினையெச் சத்தின் பின் போ என்னும் துணைவினை.

எ-டு: படித்துக்கொண்டே போகிறான்.

(19) ஆதல்வினை

ஒன்றைச் செய்வதற்கு ஆன நிலைமையை உணர்த்தும் வினை ஆதல்வினையாம்.

எ-டு: வரலானான், எழுதலானேன்.