பக்கம் எண் :

180தமிழ் வரலாறு

(20) இரட்டைக்கிளவிவினை (Frequentative Verb)

என்றும் அடுக்குத்தொடரான இருகுறிலிணையாகவே வரும் வினை இரட்டைக்கிளவி வினையாம்.

எ-டு: குறுகுறுக்கும், சலசலக்கிறது.

(21) மிகுப்புவினை (Intensive Verb)

ஒரு செயலை அல்லது நிகழ்ச்சியை மிகுத்துக் காட்டும் வினை மிகுப்பு வினையாம்.

எ-டு:

பொதுவினை மிகுப்புவினை
ஆரிக்கிறது
ஆய்ந்தான்
காப்பான்
ஆரவாரிக்கிறது
ஆராய்ந்தான்
பாதுகாப்பான்

ஆரித்தல் ஒலித்தல். ஆர்தல் நிறைதல். ஆர = நிரம்ப, மிக. ஆர-ஆர். பாது = ஓம்பும் வெட்சி ஆநிரைப் பகுதி.

(22) வழுவமைதி வினை (Anomalour Verb)

வழுவாயினும் வழுவற்றதுபோல் இலக்கணியரால் அமைக்கப் பெற்றவினை வழுவமைதி வினையாம்.

உண்டு (உள்+து) என்னும் குறிப்புவினைமுற்று, முதற்கண் படர்க்கை ஒன்றன்பால் வினையாயிருந்து, பின்பு ஐம்பால் மூவிட ஈரெண் பொதுவினையாய் வழங்குகின்றது.

உண்டு என்பதற்கு எதிர்வினை இன்று என்பது. அது இன்றும் ஒன்றன்பால் வினையாகவே வழங்குதல் காண்க.

உண்டு = உள்ளது (குறிப்புவினையாலணையும் பெயர்). உண்டு பண்ணுதல் உள்ளதாய்ச் செய்தல். உண்டாக்குதல் உள்ளதாக்குதல்.

வேண்டும், வேண்டாம், வேண்டா

வேண்டும் என்னும் துணைவினை, வேண்டும் என்னும் வினையின் (செய்யும் என்னும் வாய்பாட்டு) எதிர்கால முற்றாம். இவ் வாய்பாட்டு வினைமுற்று, இற்றை மலையாளத்திற்போல் தமிழிலும் முதற் காலத்தில் ஐம்பால் மூவிட ஈரெண் பொது வினையாயிருந்தது. அது பின்னர்ச் செய்யுள் வழக்கில், பலர் பாலொழிந்த நாற்பாற் படர்க்கைக்கே வரையறுக்கப்பட்டது. இது

"பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா."

(தொல். வினை. 30)