|
ஆயின், இப் பொருளிலும் இதன்
வழிப்பொருள்களிலும், வேண்டற்சொல் வரும்
சொற்றொடரமைப்பு மாறிவிட்டது. ‘நான் குடிக்கத்
தண்ணீர் வேண்டும்.‘ (தண்ணீரை வேண்டுகிறேன்) என்று
இருக்கவேண்டிய உயர்திணைப் பயனிலை முடிபு, ‘எனக்குக்
குடிக்கத் தண்ணீர் வேண்டும்‘ என்று, அஃறிணைப்
பயனிலை முடிபாய் மாறிற்று. ‘நீ என்ன வேண்டு
கிறாய்?‘ என்பது, ‘உனக்கு என்ன வேண்டும்?‘ என்று
மாறிற்று. ‘நான் தண்ணீர் குடிக்க வேண்டும்‘
என்பதும், ‘நான் தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்‘
என்னும் பொருளதே.
மிகத் தேவையான செயலைக்
கட்டாயமாய்ச் செய்து முடிக்க வேண்டியிருத்தலின்,
தேவைக்கருத்தினின்று கட்டாயக் கருத்துப்
பிறந்தது.
எ-டு: கடல் வணிகர் கப்பலிற்
கொண்டுவரும் சரக்குகட்கு ஆயம் (வரி)
செலுத்தவேண்டும்.
கட்டும் ஆயம் கட்டாயம். கட்டாயவினை
அதிகாரத்தை யன்றி அன்பைப் பொறுத்ததாயின்
ஆர்வவினையாம்.
எ-டு: என்
மகன் திருமணத்திற்குத் தாங்கள் கட்டாயம்
வரல்வேண்டும்.
கட்டாய வினை பெரும்பாலும் தவறாது
செய்யப்படு தலின், வேண்டற்சொல் தவறில்லா
உண்மையையும் உணர்த்த லாயிற்று.
எ-டு: ஐயன்
என்னும் பெற்றோன் பெயர், தாழ்த்தப்பட்ட
வகுப்பினரிடையும் தொன்றுதொட்டு வழங்கி
வருவதால், அது தூய தமிழ்ச் சொல்லாயிருத்தல்
வேண்டும்.
இவ் வுண்மை யுணர்த்தற் கருத்தினின்றே
உறவுமுறை யுணர்த்தற் கருத்தும் கிளைத்தது.
எ-டு: அவன் உனக்கு என்ன வேண்டும்?
இது, ‘அவன் உனக்கு என்ன உறவுமுறையாதல்
வேண்டும்?‘ என்பதன் தொகுத்தலாம்.
இனி, வேண்டும் என்னும் சொல் கட்டாய
வினையாய் அல்லது விருப்ப வினையாய் வரும்
தொடரியம், ஒருவர் வினையையேயன்றி இருவர்
வினையைக் கொண்டதாகவும் இருக்கும்.
|