இப் பெயரையும், குமரியாற்றின் மறுபெயரான கன்னி
என்பதையும், குமரிமலையிற் பிறந்தோடிய பஃறுளி
யாற்றங் கரையிலிருந்த தலைக்கழக இருக்கையான
பாண்டியர் முதல் தலைநகரின் மதுரை என்னும்
பெயரையும், வட சொல்லாகக் காட்டிவிடின், தமிழ்
வடமொழிக்குப் பிற்பட்ட தென்றும், இந்திய
நாகரிகம் ஆரிய நாகரிகம் என்றும், ஆய்விடும்
என்னும் கருத்துடன், தமிழ்ப் பகை வரான
வடமொழியாளர் தொன்றுதொட்டு அக் குமரிக்கண்ட
இடப்பெயர்கட்கு வடசொன்மூலங் கற்பித்து
வரலாயினர்.
குமரி என்பது கும் என்னும் தூய தமிழ்
முதனிலையினின்று பிறந்த தமிழ்ச்சொல்.
கும்முதல் = குவிதல், கூடுதல், திரளுதல்,
பருத்தல்.
கும் - கும்மல் - கும்மலி = பருத்தவள்.
கும் - குமுக்கு = கூட்டம்.
கும் - குமர் = கூடற்கேற்ற இளமை அல்லது
பருமை, அதையுடைய கன்னி, கன்னிமை, இளமை, அழியாத்
தன்மை.
குமர் - குமரன் = கூடற்கேற்ற இளைஞன்,
இளஞனான முருகன்.
ஒ. நோ: முருகு = இளமை, முருகன். முருகு -
முருகன்.
குமர் - குமரி = இளைஞை, கன்னி,
கன்னியாகக் கருதப்பெறும் காளி, ஓர் ஆறு, ஒரு மலை.
கூடற்கேற்ற நிலையில் எல்லா
வுயிரினங்களும் அததற் கேற்றவாறு பருத்திருத்தல்
இயல்பு. இதனாலேயே, ஆடு மாடு முதலிய சில
விலங்கினங்களும் கோழி மயில் முதலிய பறவை
யினங்களும், பருத்த இளமைநிலையில்
விடையெனப்படும். விடைத்தல் = பருத்தல். விடை -
விடலை = இளைஞன், பாலைநிலத் தலைவன். virgin
என்னும் ஆங்கிலச் சொற்கும், virgo,
to swell என்று
பொருட்கரணியங்காட்டுவர். ஒருவனைக் குமரன்
என்றும் ஒருத்தியைக் குமரி என்றும்
சொல்லும்போது, இளமைக் கருத்துடன் பருமை அல்லது
வலிமைக் கருத்தும் கலந்திருத்தலை நோக்குக.
"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில்
திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய
ருறுத்துப்
பாலை என்பதோர் படிவங்
கொள்ளும்" (சிலப்.11: 62-6)
குமரி என்னுங் காளி தொன்றுதொட்டுத்
தமிழ்நாட்டுப் பாலை நிலத் தெய்வம். பாலை என்பது
முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிலில் அடையும்
வறண்ட நிலை. குமரிமலை குறிஞ்சிநிலத்
|