தன்மையால்
அப் பெயர் பெற உரிமையுள்ளது. காளி போரில்
வெற்றி தரும் கொற்றவை யென்றும், குரு என்னும்
கொப்புள நோய் வருவிக்கும் அம்மை யென்றும்,
கருதப்பட்டபின், அவள் வழிபாடு ஏனை நிலங்கட்கும்
பொதுவாயிற்று. வடநாட்டிலும் தமிழர் வழியினரே
பெரும்பாலரா யிருக்கின்றமையின், அங்கும் காளி
வணக்கம் இருந்து வருகின்றது. வரலாறறியாதவர்
வடக்கிலிருப்ப தெல்லாம் ஆரிய வழக்கமெனத்
தவறாகக் கருதிக்கொண்டிருக் கின்றனர். குமரி
தமிழர் பொதுத் தெய்வமான பின், அவள் பெயர் ஓர்
ஆற்றிற்கும் இடப்பட்டது.
குமரன், குமரி என்னும் தென்சொற்கள்
வடமொழியில் குமார, குமாரி என நீண்டு, முறையே
மகனையும் மகளையுங் குறிக்கும். வடவர் குமார என்னும்
சொல்லைக் கு+மார என்று பிரித்து, சாவில்லாதவன்.
அதனால் இளமையானவன் என்று பொருள் கூறி
வடசொல்லாகக் காட்டுவர். "ஆறிலுஞ் சாவு,
நூறிலுஞ் சாவு." ஆதலால், அங்ஙனம் பொருள் கூறுவது
பொருந்தாது. குமரி என்னும் சொற்கு உடல் திரண்ட
இளைஞை என்பதே இயற்பொரு ளென்பது, "கோடிச்
சேலைக்கொரு வெள்ளை, குமரிப் பெண்ணுக் கொரு
பிள்ளை" என்னும் பழமொழியால் தெரியவரும்.
இளமை பற்றியே ஈனாவாழை குமரிவாழை எனப்படுதலும்
என்க.
கன்னி
முழுகிப் போன குமரிக்கண்டத்தின்
வடகோடியில் குமரி யென்றொரு பேரியாறிருந்தமை,
முன்னரே கூறப்பட்டது.
"வடவேங்கடந் தென்குமரி"
என்று தொல்காப்பியச் சிறப்புப்
பாயிரத்திலும்,
"தெனாஅ துருகெழு குமரி" (புறம். 6)
என்று புறப்பாட்டிலும் குறிக்கப்பட்டது
குமரியாறே.
குமரி, கன்னி என்பன ஒருபொருட்
சொற்களாதலால், குமரியாறு கன்னியாறு எனவும்படும்.
"மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோ லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி"
என்னும் சிலப்பதிகாரக் கானல்வரிப்
பாடல், குமரியாற்றைக் கன்னி யெனக் குறித்தல்
காண்க. கன்னி என்பது காளியின் பெயரே.
|