கன்னுதல் என்பது பழுத்தலைக் குறிக்கும்
ஓர் அருந்தமிழ்ச் சொல். வெப்பத்தினாலாவது
அழுத்தத்தினாலாவது உள்ளங் கையிலும்
உள்ளங்காலிலும் அரத்தங்கட்டிச்
சிவந்துவிட்டால், அரத்தங் கன்னி விட்டது
என்பர். கன்னுதல் வேறு; கன்றுதல் வேறு. முன்னது
பழுத்தல்; பின்னது வலுத்தல். கனி (பழம்) என்னும்
சொல் கன்னி (பழுத்தது) என்பதன் தொகுத்தலே.
ஒ.நோ: கிள்ளி - கிளி, மண்ணி - மணி.
கிள்ளுதலாவது காய்கனிகளைக்
கொத்துதல். மண்ணு தலாவது கல்லை மாசறக் கழுவுதல்.
கிளப்பது கிளி என்பது ஆராய்ச்சியில்லார்
கூற்றென அறிக.
கள்ளுதல் என்னும் வினை
வழக்கற்றபின், களி என்னும் வினைப் பெயர் அல்லது
வினைமுதற்பெயர் முதனிலையாய் வழங்குவது போன்றே,
கனி என்னும் வினைமுதற்பெயரும் வழங்குகின்றதென
அறிக.
பூப்பு என்னும் சொற் போன்றே
கன்னுதல் என்னும் சொல்லும் நிலைத்திணைக்
குரியதாயிருப்பதும், (mature)
என்னும் ஆங்கிலச் சொல்லும் பழுத்தல் பூப்படைதல்
என்னும் இருபொருளிலும் வழங்குவதும் இங்குக்
கவனிக்கத்தக்கன.
கனிந்த கனிபோன்ற பூப்படைந்த
பெண்ணும் நுகர்ச்சிக் கேற்றவள் என்பதையே,
கன்னி என்னும் சொல் உணர்த்தும்
சமைந்தவள்(பக்குவ மானவள்) என்னுஞ் சொல்லையும்
நோக்குக.
மதுரை
மதுரையென்று முதலாவது பெயர் பெற்றது
பஃறுளி யாற்றங் கரைத் தலைக்கழக இருக்கையே.
அதுவும் இடைக்கழக இருக்கை யாகிய
கபாடபுரமும்(அலைவாய்?) முழுகிப் போன பின்பே,
இற்றை வைகைக் கரை மதுரை அமைந்தது. அதுவும்
மூன்றாம் மதுரையே.
குமரிக்கண்டத்தினின்று வடக்கே
சென்ற தமிழர் வழியினரே கண்ணன் மதுரையையும்
அமைத்தனர். அதற்கு அப் பெயர் இட்டது தம்
முன்னோரையும் அவர் நகரையும் நினைவுகூர்தற்கே.
அப் பெயர் அந்நாட்டு மொழியியல்பிற்கேற்ப
மதுரா எனத் திரிந்துள்ளது. கண்ணன் காலமாகிய
பாரதக் காலத்தில் வைகை மதுரையின்மையால்,
நாவலந் தேயத்தில் இரண்டாவது ஏற்பட்ட மதுரை
வடநாட்டு மதுரையே. ஆதலால், அதை அமைத்தவர்
தலைக்கழக மிருந்த நிலப்பகுதியை முழுக்கிய முதற்
கடல் கோளினின்று தப்பியவராயிருத்தல் வேண்டும்.
வைகை மதுரை
|