1
"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்
- ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்
றேனையது
தன்னே ரிலாத தமிழ்." (தண்டியலங்கார
வுரைமேற்கோள்)
இயனிலைப் படலம்
(தோரா. கி. மு. 50,000-10,000)
1. முற்படை
i குமரிக்கண்டம் (தோரா. கி.மு.?-5,500)
"இந்துமாவாரி ஒரு காலத்தில்
சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின்
தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின்
கீழைக்கரைமட்டும் பரவியிருந்த ஒரு
நிலப்பரப்பாயிருந்தது. கிளேற்றர் இப் பழம்
பெருங் கண்டத்தை, அதில் வதிந்திருந்த
குரங்கொத்த உயிரி(பிராணி)பற்றி இலெமுரியா (Lemuria)
என்றழைக் கின்றார். இக் கண்டம் மாந்தனின்
பிறந்தகமா யிருக்கக் கூடுமாத லின், மிக
முதன்மையானது" என்றார் பேரறிஞர் எக்கேல்.
"ஒரு காலத்தில்
தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும்
இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த
நிலப்பரப்பிருந்தது" என்றார் அறிஞர்
ஓல்டுகாம்.
"காட்டு எலியட்டு
என்பவர் எழுதியுள்ள மறைந்த இலெமுரியா(Lost
Lemuria) என்னும் நூலிலுள்ள
நிலப்படத்தி லிருந்து, ஒரு பெரு மலைத்தொடர்
மேலைக்கடலில் தொடங்கித் தென்வடலாகக்
குமரிமுனைக்குத் தென்பாலிருந்த நிலப்பகுதியில்
நெடுந்தொலைவு சென்று, பின்பு தென்பாலிருந்த
நிலப்பகுதியில் நெடுந்தொலைவு சென்று, பின்பு
தென்மேற்காகத் திரும்பி, மடகாசுக்கர் என்னும்
ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத்
தெரிகிறது" என்றார் பேரா. கா.சுப்பிரமணியப்
பிள்ளை.
|