பக்கம் எண் :

117

5

கிளர்நிலைப் படலம்

(கி.மு. 100-இன்றுவரை)

(1) திருவள்ளுவர் (கி.மு. முதல் நூற்.)

திருவள்ளுவர், ஆரியப் பல்சிறு தெய்வ வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும், அருள்நிறைந்த துறவியரே அந்தணர் என்று வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும் ஆரியமுறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும், தமிழ்ப் பண்பாட்டைக் கிளர்வித்தார்.

(2) நக்கீரர் (கி.பி.2ஆம் நூற்.)

நக்கீரர், "ஆரியம் நன்று, தமிழ்தீது" என வுரைத்த குயக் கொண்டானை அங்கதம் பாடிச் சாவித்து, பின்பு பிறர் வேண்டு கோட்கிணங்கி அவனை உயிர்ப்பித்து, தமிழின் உயர்வை மெய்ப் பித்துக் காட்டினார்.

(3) பரஞ்சோதி முனிவர் (16ஆம் நூற்.)

பரஞ்சோதி முனிவர், தம் திருவிளையாடற் புராணத்தில்,

"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ"

என்று பாடித் தமிழிலக்கண வுயர்வை எடுத்துக்கூறினார்.

(4) சிவஞான முனிவர் (18ஆம் நூற்.)

வடமொழி உயர்வென்றும் தமிழ் தாழ்வென்றும் கருதப்பட்ட காலத்திலும் இடத்திலும் இருந்துகொண்டு, தம் ஆழ்ந்த தென் மொழி வடமொழிப் புலமையாலும், அரிய இலக்கணவாராய்ச் சியாலும், செய்யுள் வன்மையாலும், தருக்க வாற்றலாலும், தமிழ் வடமொழிக்கு எள்ளளவும் இளைத்ததன்றென நிறுவியர் மாதவச் சிவனான முனிவராவர்.