பக்கம் எண் :

118தமிழ் வரலாறு

(5) சுந்தரம்பிள்ளை (19ஆம் நூற்.)

சுந்தரம்பிள்ளை தம் மனோன்மணீயத்திற் பின்வருமாறு தமிழை ஆரியத்தோடுறழ்ந்து, ஆரியச்செருக்கை அடக்கினார்.

தமிழ்த் தெய்வ வணக்கம்

தரவு - 2

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே."

தாழிசை-3

"சதுர்முறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழி நீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே."

தாழிசை-10

"பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

தாழிசை-11

"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி."

தாழிசை - 12

"மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ."

(6) பரிதிமாற் கலைஞன் (20ஆம் நூற்.)

சூரிய நாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞன் என்று மாற்றி, தனித்தமிழுக்கு வித்தூன்றினார்.

(7) பா.வே. மாணிக்க நாயகர்

தம் நுண்மாண் நுழைபுலத்தாலும் பன்மாண் பொறிவினைப் பயிற்சியாலும், தமிழ் நெடுங்கணக்கை ஆழ்ந்தாய்ந்து தமிழே உலக முதன் மொழியென முதன்முதற் கண்டவரும், அதை அஞ்சாது எங்கும் எடுத்து விளக்கிய தண்டமிழ்த்தறுகண்ணாளரும் பா.வே. மாணிக்க நாயகரே.