பக்கம் எண் :

கிளர்நிலைப் படலம்119

(8) சீநிவாசையங்கார் (P.T.)

தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்று மறுக் கொணாத சான்று காட்டி, ஆங்கிலத்திற் சிறுநூலும் பெருநூலும் முதன் முதலாக வரைந்தவர், சென்னைப் பல்கலைக்கழக முன்னை வரலாற்றுத் துணைப்பேராசிரியர் பி.தி.சீநிவாசையங்கார் ஆவர்.

(9) கிருட்டிணசாமி ஐயங்கார் (S.)

அயலாரும் தமிழ்ப்பகைவரும் வையாபுரிப்பிள்ளை போன்ற கொண்டான்மாரும் கழகம் என்பதே இருந்ததில்லை யென்று உரத்துக் கூறிய காலத்தில், கடைக்கழக வுண்மையைக் "கடை வள்ளல் காலம்" என்னும் அரிய ஆராய்ச்சி நூலால் ஆணித்தரமான சான்று காட்டி நிறுவியவர், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரா யிருந்த கிருட்டிணசாமி ஐயங்காரே.

(10) சேசையங்கார் (T.)

தமிழரின் தென்னாட்டுப் பழங்குடிமையையும், தமிழின் பெருமையையும், தக்க சான்று காட்டி விளக்கியவர், பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவராயிருந்த சேசையங்கார் ஆவர்.

(11) ஆபிரகாம் பண்டிதர்

சிலப்பதிகார இசைத்தமிழ்ப் பகுதிகளைச் செவ்வையாக ஆராய்ந்து,பெருந்தொகையைச் செலவிட்டடு, ஆயப்பாலை வட்டப் பாலைப் பண்திரிவு முறைகளையும் வீணையியல்பையும், தம் கருணாமிர்த சாகரத்தின் வாயிலாக விளக்கிக்காட்டி, தமிழிசையின் முன்மையையும் தாய்மையையும் நிறுவியவர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதரே.

(12) கா. நமச்சிவாய முதலியார்

தமிழர் பலர் தமிழாசிரியத் தகுதிபெற இயலாவாறு, வடமொழிப் பயிற்சியோ டிணைக்கப்பட்டிருந்த சென்னைப் பல்கலைக்கழகப் புலவன் (வித்துவான்) தேர்வுப் பாடத்திட்டத்தைக் கவனித்து, அதன் தீங்கைக் கண்டு, தனித்தமிழ்ப் பிரிவு (7D) ஏற்படுத்திய பெருமை, அப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவ ராயிருந்த நமச்சிவாய முதலியாரதே.

(13) மு. சி. பூரணலிங்கம் பிள்ளை

தமிழ்நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல்