பக்கம் எண் :

20தமிழ் வரலாறு

"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள." (527)

"சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்." (195)

"நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்." (17)

என்னும் குறள்களை நோக்குக.

நீர் = நீரின் குளிர்ந்த தன்மை, தன்மை. நீர்மை = சிறந்த தன்மை - தன்மை. மை = கருமுகில், மழைநீர், நீர்.

நீர், மை என்னும் இருசொல்லும் பண்புப்பெயரீறானபின், நீர் என்னும் சொல்லும் தன்மை யென்னும் பொதுப்பண்புப் பெயர் போல் மையீறு பெற்றதென்க.

தொழிற்பெயரீறுகள்

தொழிற்பெயர் வகைகள்

(1) முதனிலைத் தொழிற்பெயர். எ-டு: அடி, கட்டு.

(2) முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

எ-டு: உண் - ஊண், புறப்படு - புறப்பாடு, கூப்பிடு - கூப்பீடு - கூப்பாடு.

(3) முதனிலை வலித்த தொழிற்பெயர்.

எ-டு: விரும்பு - விருப்பு, நீந்து - நீத்து.

(4) முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர்.

எ-டு: கருது, கருத்து, பேசு-பேச்சு.

(5) முதனிலை ஈறுபெற்ற தொழிற்பெயர்.

எ-டு: செய்கை, படிப்பு.

(6) முதனிலை நீண்டு ஈறுபெற்ற தொழிற்பெயர்.

எ-டு: நடி- நாடகம், படி-பாடம்.

(7) முதனிலை வலியிரட்டித்து ஈறுபெற்ற தொழிற்பெயர்.

எ-டு: ஆடு-ஆட்டம், ஆகு-ஆக்கம்.

ஆட்டம், ஆக்கம் என்பன ஆடுதல், ஆகுதல் என்று பொருள் படுங்கால், தன்வினையடிப் பிறந்தவையே.