"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள." (527)
"சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்." (195)
"நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்." (17)
என்னும் குறள்களை நோக்குக.
நீர் = நீரின் குளிர்ந்த தன்மை, தன்மை.
நீர்மை = சிறந்த தன்மை - தன்மை. மை = கருமுகில்,
மழைநீர், நீர்.
நீர், மை என்னும் இருசொல்லும் பண்புப்பெயரீறானபின்,
நீர் என்னும் சொல்லும் தன்மை யென்னும் பொதுப்பண்புப்
பெயர் போல் மையீறு பெற்றதென்க.
தொழிற்பெயரீறுகள்
தொழிற்பெயர் வகைகள்
(1) முதனிலைத் தொழிற்பெயர்.
எ-டு: அடி, கட்டு.
(2) முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
எ-டு: உண்
- ஊண், புறப்படு - புறப்பாடு, கூப்பிடு - கூப்பீடு -
கூப்பாடு.
(3) முதனிலை வலித்த தொழிற்பெயர்.
எ-டு: விரும்பு - விருப்பு,
நீந்து - நீத்து.
(4) முதனிலை வலியிரட்டித்த
தொழிற்பெயர்.
எ-டு: கருது, கருத்து,
பேசு-பேச்சு.
(5) முதனிலை ஈறுபெற்ற தொழிற்பெயர்.
எ-டு: செய்கை, படிப்பு.
(6) முதனிலை நீண்டு ஈறுபெற்ற
தொழிற்பெயர்.
எ-டு: நடி- நாடகம், படி-பாடம்.
(7) முதனிலை வலியிரட்டித்து ஈறுபெற்ற தொழிற்பெயர்.
எ-டு: ஆடு-ஆட்டம், ஆகு-ஆக்கம்.
ஆட்டம், ஆக்கம் என்பன ஆடுதல், ஆகுதல்
என்று பொருள் படுங்கால், தன்வினையடிப் பிறந்தவையே.
|