பன்மை: (நீம்) - ஈம்.
ஈம்+கள் = ஈங்கள்.
(நீர்) - ஈர்-இர்
ஈர்+கள் = ஈர்கள்.
நீம் செய்தீம் என்பது இன்றும்
தென்னாட்டு வழக்கு.
எப்போது வந்தீங்கள் என்னும்
வழக்கையும் நோக்குக.
ஏவல்வினை யீறுகள்
ஒருமை:
(1) ஈறற்றது. எ-டு: செய்.
(2) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது.
செய்+உது+ஈ=செய்யுதீ-செய்தி.
"வழிபடு வோரை வல்லறி தீயே" (10:1)
என்னும் புறப்பாட்டில் வரும் அறிதீ
என்பதற்கு, அறிவை என்று பழையவுரை பொருள்
கூறியிருப்பதையும், அறிதீ-அறிதி = அறிவாய் என்று
சாமிநாதையர் அருஞ்சொற்குறிப்பு
வரைந்திருப்பதையும், ஊன்றி நோக்குக.
சென்றீ (சென்று+ஈ) என்பது சென்றுதவுக
என்று பொருள் படும் உதவிவினை. நின்மே
(நில்லும்+ஏ) என்பது நில்லுங்களேன் என்று
பொருள்படும் ஆர்வவினை. நில்லும் என்பது
உகரந்தொகின் நின்ம் என்றாகும். ஒ-நோ:
போலும்-போன்ம். ஏன் என்பது எனக் குறைந்து
நின்றது. உலகவழக்கிலும் வரட்டே என வழங்குதல்
காண்க. நின்+மே என்னும் தவறான பகுப்பு, அதை
ஒருமையெனக் கொள்ளச் செய்திருக்கின்றது.
இதையறியாது,
"முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து
வருமே" (934)
என நூற்பா யாத்தார்
தொல்காப்பியர். அதைப் பின்பற்றினார்
பவணந்தியார்.
(3) செய்யாய் என்னும் முன்னிலை
யொருமைவினை குரல் வேறுபாட்டால், செய் என்று
பொருள்படும். ஆய் என்பது ஏவ லொருமை யீறென்றே
கூறாது,
"செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன்
உடைத்தே" (933)
என்றே தொல்காப்பியர் கூறுவதால்,
அதன் அருகிய வழக்குப் புலனாகும். ஆய் என்பது
முன்னிலை யொருமை யீறேயாயினும், ஏவலொருமை வினை
அதை ஏற்கவேண்டுமென்றும் யாப்புற வில்லை, என அறிக.
|