பக்கம் எண் :

திரிநிலைப் படலம்71

நகர். துவர் = சிவப்பு, செம்பு. துவர்- துவரை = செப்புக் கோட்டையுள்ள நகர்.

"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
யுவரா வீகைத் துவரை யாண்டு" (புறம். 201)

அகத்தியர் "துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண் வேளி ருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து"

என்னும் நச்சினார்க்கினியர் கூற்று, துவாரகை, வேள்புலம், அருவாநாடு ஆகியவற்றின் அண்மையை நோக்கும்போது நன்றாய் விளங்கும்.

உத்தரமண்டலம்: மதுரை (Muttura ). இது தலைக்கழக மதுரையின் பெயர் கொண்டது. இவ் வடமதுரையிற் பிறந்த கண்ணன் (கிருட்டிணன்) என்னும் அரசன் இடையர் குலத்திற் பிறந்து தமிழ் இடையர் போல் ஏறுதழுவி மணந்த ஒரு திரவிட மன்னனே. கிருஷ்ண (கருப்பன், கரியன்) என்னும் பெயரின் க்ருஷ் என்னும் முதனிலையும், கருள் என்னும் தென்சொல் திரிபே. கள்-கரு-கருள். கருளுதல் கருத்தல். மதுபுர என்பது மதுரா எனத் திரிந்ததென்பது பொருந்தாது.

பீகார்: பாடலிபுரம் (Patna ). இது பாதிரிப்புலியூர் என்னும் தமிழ்ப்பெயரின் வடமொழிப்பெயர்ப்பு. இது பாடலி புத்திரம் என்றும் வழங்கும். முதலில், தென்னார்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பாதிரிப்புலியூர் பாடலி புத்திரம் எனப்பட்டது. அதன்பின் அது வடநாட்டு நகரப் பெயராய் அமைந்தது. பாதிரி என்னும் பூப்பெயர் வட மொழியிற் பாடலி எனத் திரியும்.

"ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால்" (நாலடி. 139)

வங்காளம்: காளிக்கோட்டம்(Calcutta ). இது காளிகோயிலாற் பெற்ற பெயர்.

காளி முதலிற் பாலைநிலத் தெய்வமாயிருந்து, பின்னர்ப் போரில் வெற்றிதருபவள் (கொற்றவை) என்றும், அம்மைநோயை உண்டாக்கு பவளும் நீக்குபவளும் என்றும், நம்பப்பட்டதினால் ஏனை நிலங்களின் தெய்வமாயும், தமிழ்நாட்டில் முதன்முதலாக வணங்கப்பட்டவள். கோயிலைக் கோட்டம் என்பது பழந்தமிழ் மரபு. வேதக்கால ஆரியத்தெய்வங்களுள் காளி இல்லை. வங்கஞ் சென்ற பின்னரே ஆரியர் காளி வணக்கத்தை மேற்கொண்டனர்;