பக்கம் எண் :

மதிப்புரை மாலை133

     இலக்கிய வழக்கில் இம் முற்று இங்ஙனமாயினும், இன்றும் எதிர்கால வினையாக, சேரநாடாகிய மலையாள நாட்டில் இருதிணை ஐம்பால் மூவிடத்தும், சோழபாண்டி நாடாகிய இற்றைத் தமிழ்நாட்டில் படர்க்கை அஃறிணை யிருபாலிலும், வழங்கிவருகின்றது. பிற்காலத் திலக்கணநூல்களும் இதை எதிர்கால வினையாகக் கொண்டிருக்கின்றன.

     விரும்புதல், மன்றாடிக் கேட்டல், தேவையாகக் கொள்ளுதல் முதலிய பொருள்களைத் தரும் வேண்டு என்னும் வினைச்சொல்லே, செய்யும் என்னும் வாய்பாட்டில் வேண்டும் என நின்று, ஒருவரை ஒன்று தப்பாது செய்யும்படி ஆர்வத்தோடாயினும் அதிகாரத்தோடா யினும் கேட்டலை அல்லது கட்டளை யிடுதலைக் குறிக்கும். ஒருவன் இறைவனை நோக்கி, "நீ எனக்கு அருள வேண்டும்." என்பது ஆர் வத்தோ டிரத்தல், அரசன் குடிகளை நோக்கி, "நீங்கள் இறை செலுத்த வேண்டும்." என்பது அதிகாரத்தோடு கட்டளையிடுதல், இவ் வினை தன்மை யிருபாற்கும் பொதுவாய் வரும்.

     நீ வரவேண்டும் = நீ வர (வருதலை) நான் விரும்புவேன்,

     விரும்புகின்றேன் (யாம் விரும்புவோம், விரும்புகின்றோம்.)
     எதிர்காலப் பொருளில் நிகழ்கால வினை உலக வழக்கிற் பயின்றுவரும்.
     எ-டு : நாளைச் சொல்கிறேன், அடுத்த கிழமை வருகிறேன்.
     ஒருவர் ஒன்று செய்ய வேண்டும் என்பதில், செய்வான் வினையும் அதை விரும்புவான் வினையுமாக இருவர் வினைகள் கலந்திருக்கின் றன. இதையே,
  "இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்."

(வினை. 46)

என்னும் தொல்காப்பிய நூற்பா உணர்த்திற்று.

     இதற்கு,
     "இது செயல் வேண்டுமென்பதுபட வருஞ்சொல், தன்பாலானும் பிறன் பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையையு டைத்தாம் என்றவாறு.
     "தானென்றது செயலது வினைமுதலை.
     "ஓதல் வேண்டும் என்றவழி, வேண்டுமென்பது ஓதற்கு வினை முதலாயினாற்கும் அவனோதலை விரும்புந் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க.
     "இதனான் ஒருசார் வினைச்சொற் பொருள்படும் வேறுபாடுணர்த் தினார்: உணர்த்தாக்கால் தெற்றென விளங்காமையி னென்பது." என்று சேனாவரையர் உரைத்திருத்தலை நோக்குக.
     வேண்டாம் என்பது, வேண்டுவம் என்னும் தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்றின் எதிர்மறையாம். செய்வம் என்னும் வாய்பாட் டின் எதிர்மறை. செய்யாம் என்றாதல் காண்க. காணோம் என்னும் தன்மைப் பன்மை வினை காணேன் என்னும் ஒருமைப்பொருளில் (தவறாக) வழங்குதல் போன்றே, வேண்டாம் என்னும் பன்மைவினையும் வேண்டேன் என்னும் ஒருமைப் பொருளிலும் வழங்கும் என்றறிக.