பக்கம் எண் :

64தமிழ் வளம்

     தமிழ்நாடு இன்னும் விடுதலை யடையவில்லை. ஆங்கிலேயன் தமிழனுக்கு மீட்பனாக வந்தானே யொழிய அடிமைப்படுத்தியாக வரவில்லை, மாபெரு நன்மை செய்தவனை மாபெருந் தீங்கு செய்த வனாகக் கருதுவது,

    

"பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
டூதியம் போக விடல்."

என்னுந் திருக்குறட்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டே யாகும். அது போன்று இற்றையாட்சியைத் தமிழாட்சியாகக் கருதுவதும் பேதைமை யின்பாற்பட்டதே. ஆரிய ஆட்சிபோய்த் திரவிட ஆட்சி வந்துள்ளது. ஆரிய ஆட்சிக்குப்பின் உடனடியாகத் தமிழாட்சி வரமுடியாது. விரை நடை, அடியெடுத்து வைப்பிற்கும் ஓட்டத்திற்கும் இடைப்படுவது இன்றி யமையாதது. அதுபோன்றே, திரவிட ஆட்சியும் ஆரிய ஆட்சிக்கும் தமிழாட்சிக்கும் இடைப்பட்டுத் தீரவேண்டும். இனிமேல்தான் தமிழாட்சி வரவியலும்.

    

தமிழாட்சியின் அறிகுறிகளாவன:-

  1. தமிழைப் பண்படாத பன்மொழிக் கலவையென்றும் வட மொழிக் கிளையென்றும் காட்டித் தமிழனை நாகரிமற்றவனென் றும் காட்டு விலங்காண்டியென்றும் இழித்தும் பழித்துங் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலி, திருத்தப்பெற்றுச் சிந்துவெளி நாகரிகப் பழம்பொருள்களை ஆராயும் பின்னிய அறிஞரைச் செவ்வையாக ஆற்றுப்படுத்தல்.
  2. அமைச்சர் மட்டுமன்றித் தமிழரெல்லாரும் தமிழ்ப்பெயரே தாங்கல்.
  3. தமிழ்வாயிற் கல்வி கலவை மொழியில் நடைபெறாது தனித்தமிழில் நடைபெறுதல்.
  4. முழுநிறைவான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுக்கப் பெறல்
  5. மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழறிஞர் தக்கவாறு போற்றப் பெறல்.
  6. தமிழ்நாட்டு முப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மண்ட பத்தின் முன்பும், மறைமலையடிகள் வெண்கலப் படிமை யேனும் சலவைக்கற் படிமையேனும் நிறுவப்பெறல்.
  7. இதுவரை அச்சிற்கு வராத உலகவழக்குத் தமிழ்ச் சொற்க ளெல்லாம் தொகுக்கப்பெறல்.
  8. குமரிநாட்டினின்று தொடங்கும் உண்மையான தமிழ்நாட்டு வரலாறு விரிவாக வரைந்து வெளியிடப்பெறல்.
  9. குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மை தமிழரெல்லாராலும் அறியப்பெறல்.
  10. தமிழ்நாட்டுக் கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல்.
  11. தமிழ் உலகவழக்குப் படிப்படியாகத் திருந்திவரல்.
  12. அரசியல் அலுவலகப் பெயர்ப் பலகைகளிலும் விளம்பரப் பலகைகளிலும் தமிழச்சொற்றொடர்கள் புணர்ச்சியுடன் எழுதப்பெறல்.
  13. தமிழ்நாட்டு ஊர்களும் தமிழிலுள்ள பெயர்ப்பலகைகளும் தூய தமிழ்ச்சொற்களையே தாங்கல்.