பக்கம் எண் :

82தமிழ் வளம்

பதிப்பாசிரியராகக் குறித்துக் கொண்டதாகவும், கேள்வி. அவ்விதழில் வரும் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளெல்லாம் பிறரால் எழுதப் பெற்றவையே.
     அவ் வாங்கில இதழிகை சென்னையில் நிறுவப்பெற்றதே அவர் சிறப்புத் தொடக்கமாயிற்று. அதன்பின், இலங்கைப் பல்கலைக்கழகத்தி லமர்ந்து அதினின்று மலையாப் பல்கலைக்கழகத்திற்குத் தாண்டி யுள்ளார்.
     இதுவரை நூல் வாயிலாகவோ சொற்பொழிவு வாயிலாகவோ தமிழுக்குச் சிறந்த தொண்டு எதும் அவர் செய்ததாகத் தெரியவில்லை. அவர் கட்டுரைகளெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். தமிழிலிருப்பவை யெல்லாம், தமிழ்நூல்கள் எந்தெந்த நாட்டு நூல்நிலை யத்திலிருக்கின்றன வென்றும், தமிழ்ப் பாடல்கள் எந்தெந்த நாட்டு விழாவிற் பாடப்படுகின்றன வென்றும் தெரிவிப்பவையே. இதற்கு ஒரு பேராசிரியர் தேவையில்லை. நாடு சுற்றிவந்த எவரும் இத்தகைய செய்தி களைச் சொல்லலாம்.
     இன்று கூட்டப்படும் தமிழாராய்ச்சி மாநாட்டின் சிறப்புகள் இரண்டு. அவற்றுள் ஒன்று மாநாட்டுச் சொற்பொழிவுகளும் கட்டுரை களும் ஆங்கிலத்தில் ஆற்றப்படுதலும் படிக்கப்படுதலும். இன்னொன்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று வயவர் சி. பி. இராமசாமி அவர்களும் பேரா. தெ. பொ. மீ.யும், வங்க நாட்டினின்று பர். சட்டர்சி யும், மாநாட்டிற்குச் செல்லுதல்.
     பர். சட்டர்சியின் தமிழறிவுத்திறம் எத்தகையதென்பது, என் அண்ணாமலை நகர் வாழ்க்கை என்னும் (பாவாணர்) கட்டுரைத் தொடரைப் படித்தவர் நன்கறிவர். அதனை இங்கு மீண்டும் கூறுதல் கூறியது கூறும் குற்றமாகும்.
     மாநாட்டிற்குச் செலவிடப்படவிருக்கும் பணம் இலக்கக்கணக்கான வெண்பொற்காசென்று தெரியவருகின்றது. இதனாற் பெறப்படும் பயன் மலை கல்லி எலி பிடித்ததாகுமோ என அஞ்சவேண்டியிருக்கின்றது.
     தமிழுக்கு ஆக்கம் செய்யும் பணித்துறைகள் எத்தனையோ பலவுள்ளன. தமிழகத்து நாட்டுப்புறத்திலும் பழஞ்சேர நாடான மலை யாள நாட்டிலும் பழங்குட நாட்டிலும், வழக்கிறந்துவருகின்ற பழந் தமிழ்ச் சொற்களையெல்லாம் தொகுப்பதற்கு ஒரு பல்கலைக்கழகமும் இதுவரை ஒரு முயற்சியும் செய்த தில்லை. வா, போ, தூக்கு என்பன போன்ற எளிய தமிழ்ச்சொற்கள் மேலையாப்பிரிக்க கானா நாட்டு மொழியின் அடிப்படைச் சொற்களாக வழங்குகின்றனவென்று ஐந்தாண் டிற்கு முன்னரே அந்நாட்டு அரசியல் தலைவர் கூறியுள்ளார். இதனை ஆராய்தற்குத் தக்க மொழியாராய்ச்சியாளர் ஒருவரை அனுப்பிவைக்க, தமிழ் நாட்டு அரசினர்க்குக் கருத்தே எழவில்லை. தமிழ்நாட்டுப் பண்டை வரலாறு தமிழ்ப் பகைவர் சிலரால் தலைகீழாக எழுதப்பட்டு வருகின்றது. இதைத் தடுத்து உண்மையான வரலாற்றை வரைவிக்க ஓர் அமைப்பகமும் இல்லை. தமிழன் பிறந்தகம் குமரிநாடாதலால், இந்துமாவாரியில் ஆழ்ந்த கடலாராய்ச்சி செய்வது இன்றியமையாததா கின்றது. தமிழுக்கு ஒரு வேர்ச்சொல் அகரமுதலியோ, சொற் பிறப்பியல் அகரமுதலியோ, இன்னும் ஏற்படவில்லை. அவற்றைத் தொகுக்கும் ஆற்றலுள்ளவர்க்கோ இருந்த சிறு சம்பளப் பதவியும் இழப்பாகின்றது.