குயில், தினசரி, புதுவை நாள்: 21.9.48 ப.2.
எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை என்ன தெரியுமா ? அது பொன்னான உரிமை’’ எங்களுக்கு இன்று கிடைத்துள்ள முத்தான விடுதலையை நாங்கள் நினைத்து நினைத்து மகிழாத நேரமில்லை!
இப்படி இந்திய யூனியனில் இருக்கும் என் நண்பர் கூறுகிறார் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பார்களே அந்தப் பழமொழி நினைவுக்கு வருகிறது எனக்கு!
ஏன் நண்பரே, இந்தியாவைவிட்டு ஆங்கிலேயன் போய்விட்டதைத் தான் உரிமை என்கிறீரா?
ஆங்கில வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்தார்கள் - அதுவரைக்கும் இந்தியர்கட்கு,அவர்களால் சில நன்மைகள் உண்டு, பல தீமைகள் உண்டு.
ஆங்கில வெள்ளையர் இந்தியாவை விட்டுப் போய்விட்டார்கள் - அதனால் அவர்களால் நமக்கு ஏற்பட்டிருந்த நன்மையை அவர்கள் எடுத்துக் கொண்டு போய்விட முடியவில்லை.அதுபோலவே அவர்கள் போனதால் அவர்களால் நமக்கு ஏற்பட்டிருந்த தீமையும் போய்விடவில்லை. இல்லை. இல்லை. வெள்ளைக்காரன் போய்விட்டான்,அவனால் ஏற்பட்டிருந்த தீமைகள் போய்விட்டன. விடுதலை வந்துவிட்டது என்கிறீரா?ஒரு போதுமில்லை.
சர்க்கஸ் கூண்டில் ஆட்டிவைக்கிறவனும்,புலியும் இருக்கப் பார்க்கிறோம் பிறகு ஆட்டிவைப்போன் கூண்டை விட்டு,அதாவது புலியை விட்டு வெளியே போய்விடுகிறான் புலிக்கு விடுதலை கிடைத்துவிட்டதா ? கூண்டு தொலைய வில்லையே அதற்கு விடுதலை ஏது?
வெள்ளைக்காரன் போய்விட்டாலும் அவன் சட்டம் இருக்கிறது.உமக்கு எங்கே இருக்கிறது உரிமை நண்பரே? |