(குயில், சென்னை, 15.7.62)
நம் காமராசருக்கு இன்று 60 ஆண்டுகள் நிறைந்தன. அவர் பல்லாண்டு வாழவேண்டும் என்று நாம் மனமார வாழ்த்துகிறோம். ஏன்? அவர் தமிழகத்தின் முதலமைச்சர்; நல்லவர்; ஆட்சி புரிவதில் வல்லவர்.
அது மட்டுமல்ல; தமிழக முதலமைச்சர் என்று காமராசர் இந்நாள் இல்லையாயின் அந்தப்பொறுப்புள்ள இடத்தை அடைந்து ஆட்சி நடத்த வேறு மனிதர் இல்லை. மனிதர் இருக்கிறார்கள். காமராசர் இல்லை என்று நாம் அறுதியிட்டுக் கூறுவோம். தமிழர்கள் அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று எண்ணுகிறார். எண்ணியபடி செயல் செய்கின்றார். அச்செயல் செய்வதிலும் வெற்றி பெற்று வருகின்றார். தாழ்மை என்பது ஏழ்மையின் பயன் என்ற உண்மையைக் கண்டறிந்தவர் காமராசர் ஒருவரே! அயர்ந்தார்! உயர்ந்தார்.அதற்கு ஆன உதவிகளும் செய்து வருகின்றார்.இதைக் காமராசரின் எதிரிகளும் மறுப்பதற்கில்லை. மக்கள் தொண்டு செய்து கிடக்கும் தக்கார் அவர். அடைய வேண்டிய பெரும் புகழை அடைந்து வருகின்றாரா என்றால், இல்லை, அது மிகக் குறைச்சல் என்பது நம் கருத்து. ஏன்? வடநாட்டவருடன் கூடிக்கொண்டு தமிழைத் தாழ்த்துகின்றார். தமிழில் என்ன இருக்கின்றது என்று முன்னொரு முறை அவர் கேட்டார். தமிழரின்தாய்மொழி பதிந்திருக்கும் உயிரில் இந்தியைப் புகுத்த வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். காமராசர்க்குள்ள நெருக்கடி நமக்குத் தெரிகின்றது.
|