(குயில், 30.6.59)
தமிழ்ப் பெருமக்களின் படித்திருவாளர்கள் (பிரதிநிதிகள்) காமராசர் முதலிய தமிழமைச்சர்கள்! ஆதலினால் அவர்கள் தமிழர்களின் பெரும்பான்மையோரின் கோரிக்கைகளைத் தாங்க வேண்டியவர்கள். இரண்டொன்றை புறக்கணிக்கலாம். எல்லாவற்றையும் புறக்கணிக்க முடியாது. இதனால், தமிழரை மட்டந்தட்டுவதில் குறுக்கே நிற்பவர் படித்திருவாளர் களாகிய காமராசர் முதலியவர்களே. தில்லி நேரு இன்று காமராசர் அமைச்சரவைமேல் நல்லெண்ணம் வைத்திருப்பதாகக் காமராசர் முதலியவர்கள் நினைப்பது தவறேயாகும். தமிழகம் விடுதலை கேட்கின்றது. அடிமையை வெறுக்கின்றது, ஆதலால் தில்லி தமிழகத்தை நெருப்புக்கண்ணால் பார்க்கின்றது, ஒழிக்க முந்துகின்றது. இடையில் அதற்குத் தடையாய் இருப்பவர்கள் படித்திருவாளர்களே! தில்லி நேரம் பார்க்கின்றது படித்திருவாளர்களை ஒழித்துக்கட்ட. இந்த நிலையில் படித்திருவாளர்கள் விழிப்போடிருக்க வேண்டும். தமிழர்களின் உயிர்த்துணையை அவர்கள் இழந்து விடலாகாது. தமிழ் பற்றிய கிளர்ச்சி - அல்ல - போராட்டம் ஏனோ தானோ என்று இருந்துவிடும் என நினைப்பது தவறு. தமிழ் இகழ்ச்சி பெறுவது தமிழர் இகழ்ச்சி பெறுவது! தமிழ் தமிழர்களின் உயிர் என்ற உணர்ச்சியின் உச்சியில் நிற்கின்றார்கள் தமிழர்கள். இரண்டிலொன்று பார்த்தே தீருவார்கள் அவர்கள். தாய்மொழிக் கோரிக்கையை அம்மொழித்தலைவர் எதிர்த்தார் என்ற வரலாறு இல்லை. எதிர்த்தால் வெற்றி கிடைக்கும் என்று வெறியன்கூடச் சொல்லமாட்டான். தமிழக அமைச்சர்கள் தமிழரின் கோரிக்கையைத் தாங்க வேண்டும் தில்லியை எதிர்க்க வேண்டுமானால் எதிர்க்கத்தான் வேண்டும்.
தமிழன்னைமேல் தாவிவரும் வடவர் அம்புகளைப் பாருங்கள். தமிழர் வாழ்வை நோக்கி எய்யப்படும் நச்சுக்களைப் பாருங்கள். இந்தி புகுத்தலைப்
|