குயில், தினசரி, புதுவை, நாள் : 9.10.48 பக்.2
முனிசிப்பல் தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் சரி, இந்திய யூனியனில் சேருவதைப் பற்றி வோட் எடுப்பது தனியாக நடைபெற வேண்டும் ; அதுவும் இந்திய சர்க்காரின் மேற்பார்வையில் நடக்கவேண்டும். என்று நேற்றைய (8.10.48) தலையங்கத்தில் ‘தினசரி’ கூறுகிறது. டில்லியும் பிரான்சும்பேசி முடித்ததற்கு மாறாகத் ‘தினசரி’ இப்படிக் கூறுவது சரியா? மேலும் ‘தினசரி’ என்ன சொல்லுகிறது? இதற்குப் பிரஞ்சிந்திய சர்க்கார் சம்மதிக்காவிட்டால் தாராளமாக அவர்கள் ராஜ்யத்தை நடத்தட்டும்; இந்தியாவுக்கும் அவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் வேண்டியதில்லை. இந்தியாவிலிருந்து தற்சமயம் கொடுத்துவரும் சகல உதவிகளையும் நிறுத்தி விட வேண்டும் என்கிறது. ‘தினசரி’ இன்று இப்படிக் கூறுகிறது. இதை இந்திய சர்க்கார் ஏன் அன்றைக்குக் கூறவில்லை . இன்றைக்காவது ‘தினசரி’ கூறுவதை இந்திய சர்க்கார் ஆதரித்துக் கூறட்டுமே. தலைமைச் சர்க்காரின் முடிவை மீறித் ‘தினசரி’ தன் சென்னை மாகாண சர்க்காரைக் கொண்டு பிரஞ்சிந்தியாவைத் தான் நினைக்கிறபடி செய்து விடுமானால்,ஏன் காமராஜர் தலைமைச் சர்க்காரை நோக்கிக் காவடி எடுத்துச் செல்ல வேண்டும்? வட நாட்டானின் தொடர்பைச் சென்னைச் சர்க்கார் அறுத்துக் கொள்ளவேண்டும் என்பது தானே கருஞ்சட்டைக்காரர் எண்ணம். வடநாட்டானுக்குக் கீழ்ப்படியாமல் சுதந்திர நிலையில் ‘தினசரி’யே தென்னாட்டின் மதிப்புக்குரிய தலைமை தாங்கி ஆட்சி நடத்தும் நிலை ஏற்பட்டால் அதுபற்றி மகிழ்பவர், கருங்சட்டையினர் தான் என்பதைத் ‘தினசரி’ அறியாதா? அத்தகைய நிலை வந்து கொண்டுதான் இருக்கிறது.
|