எண்ணியிருப்பார்கள், என்ன எண்ணியிருக்க முடியும்? பர்மா அரிசியைப் பார்த்ததும் இது நல்ல அரிசியாய் இருக்கிறதே உங்களுடைய நெற்களஞ்சியங்களைக் காட்டுங்கள் என்றிருப்பார்கள். வெள்ளியைப் பார்த்ததும் உங்களுடைய இரும்புப் பெட்டியைக் காட்டுங்கள் என்றிருப்பார்கள். பயந்த பர்மியர்கள் தங்கள் நெற்களஞ்சியங்களையும் இரும்புப் பெட்டிகளையும் ஜப்பானியர்களுக்குக் காட்டியிருப்பார்கள். காட்டத் தவறியவர்களை ஜப்பானியர்கள் சுட்டுத் தள்ளியிருப்பார்கள். இதுதான் நடந்திருக்கும். இதே போல்தான் சற்றேறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டைப் பார்த்ததும் ஆரியர்கள் எண்ணியிருப்பார்கள். வளமுள்ள நாடும் அதில் வளைந்து வளைந்து செல்லும் ஆறும், அதற்குப்பக்கத்தில் வயல்களும் இருக்கக் கண்ட ஆரியர்கள் அத்தகைய செல்வமுள்ள நாடு தங்களுக்கில்லையே என்று ஏங்கியிருப்பார்கள். ஆனால், தமிழர்களைப் பார்த்து நெற்களஞ்சியங்களையும் பணப் பெட்டிகளையும் காட்டச் சொல்லிக் கேட்டிருக்க மாட்டார்கள். கேட்கவில்லை, கேட்கத் தைரியமில்லை, தைரியமிருக்க, கையில் மருந்தில்லை; பர்மியர்களைப் போல, தமிழ்நாட்டில் செல்வங்களைக் கண்டிருப்பார்கள். மிதமிஞ்சிய போகபோக்கியத்தில் புரளும் தமிழர்களையும் கண்டிருப்பார்கள். அசூயைப்பட்டிருப்பார்கள், அபகரிக்கவும் நினைத்திருப்பார்கள் ஏழைகாரில் செல்லுகிறவனைக் கண்டு நினைத்ததைப் போல். ஆனால் அபகரிக்க வேண்டுமென்று நினைத்திருப்பார்களே ஒழியத் தமிழர்களிடையே அச்சத்தைப் புகுத்தியிருக்க மாட்டார்கள். அதாவது நெற்களஞ்கியங்களை, பணப்பெட்டிகளை, பத்திரப் பீரோக்களைக் காட்டத் தவறிய பர்மியர்களை ஜப்பானியர்கள் சுட்டு வீழ்த்தியதைப் போலத் தமிழர்களை ஆரியர்கள் சுட்டு வீழ்த்தவில்லை. சுட்டு வீழ்த்தவில்லையே தவிர, தமிழர்களது நெற்களஞ்சியங்களையும், பணப்பெட்டிகளையும் கண்ட ஆரியர்கள் அவைகளை அபகரிக்கச் சூதான திட்டமிட்டார்கள். |