ஜப்பானியர்களுக்கும் ஆரியர்களுக்கும் எண்ணியதை நிறைவேற்றக் கடைப்பிடித்த மார்க்கங்களில் வேறுபாடு இருக்கலாமே ஒழிய, எண்ணிய எண்ணங்களில் இம்மியளவும் மாறுபாடு இல்லை. அந்த விபரீத எண்ணங்களின் விளைவுதான் தமிழகத்தின் கானகங்களில் கங்கைக் கரையில் உலவியவர்களின் கூட்டம், யாகம், ஓமப்புகை, வேத ஒலி கேட்கும்நிலை முதலியன தோன்றின; தமிழில் ஆரியம் கலந்தது. தமிழகத்துடன் ஆரியவர்த்தம் ஐக்கியமானது; பிறகு கேட்க வேண்டுமா? பாசறைகளுக்குப் பக்கத்தில் ஆஸ்ரமங்கள். மன்னர்களுக்குப் பக்கத்தில் மாடல மறையவர்கள் என்ற நிலை ஏற்பட்டது. தனிநிலை கெட்டது, நிலை கெடவே நினைப்பும் கெட்டது; அயல்நாட்டார் கண்டு கேலி செய்கிற அளவுக்குக் கெட்டது. |
இப்பொழுது நீங்கள் கேட்கலாம், ’ஆரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தமிழர்களுக்குத் தனிப்பண்பு இருந்ததாகக் கூறினீர்களே, அந்தத் தனிப்பண்பு ஜீவித்திருக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்ன? அயல் நாட்டார் தங்களுடைய நினைப்பைக் கண்டு கேலி செய்கிற அளவுக்குத் தமிழர்கள் தங்களுடைய தனிப்பண்பு கெட ஏன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?’ என்று நான் உங்களுக்குக் கூற ஆசைப்படுகிறேன்; "நிலைக்குத் தக்கவாறு பண்பும் மாறும், செல்வம் உயர்ந்திருந்தால் மனப்பண்பு உயர்ந்திருக்கும். எளியவரைக் கண்டால் இரக்கம் காட்டச்சொல்லும், மனதிலே தாராளம் இருக்கும். பேச்சிலே பெருமிதம் தோன்றும். எடுத்துக்காட்டாக, மாலை நேரம் ஒரு வாலிபன் தன் நண்பர்கள் புடைசூழ, நன்றாகச் சாப்பிட்டுவிட்டுக் காபி கிளப்பிலிருந்து வெளியில் வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். வருகிற வாலிபனைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன், ‘சாமி, காலணாகாசு, சாமி’ என்று கேட்பான். உடனே வாலிபன் ஒரு அணாவை வீசி எறிவான். பீடாவைப் போட்டுக் கொண்டே இன்னும் கொஞ்ச தூரம் சென்றவுடன் வாலிபனைப் பார்த்து இன்னொரு பிச்சைக்காரன் "ஐயா" என்று கையை நீட்டுவான். இல்லை என்னாமல் காலணா காசு கொடுப்பான். இன்னும் கொஞ்ச தூரம் சென்றவுடன் அதே வாலிபனைப் பார்த்து மற்றொரு பிச்சைக்காரன் "ஐயா" என்றால் "சீ போ! போடான்னா |