"யவன நாட்டுக் கலங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரையை முத்தமிட்டன. தமிழ்நாட்டு முத்துக்களை இத்தாலி நாட்டு எழிலரசிகள் தங்கங்களைக் கொடுத்து வாங்கினார்கள்; தமிழ்நாட்டு மன்னன் ஒருவன் ஈழநாடு சென்று வெற்றி பெற்றான். இமயத்தில் சேர, சோழ, பாண்டியர்களது இலச்சினைகள் பொறிக்கப்பட்டன; வெற்றி முரசு கொட்டினார்கள்; போரும் காதலும் அவர்கள் போற்றிய பொருள்கள்" என்றெல்லாம் பண்டைத் தமிழ்நாட்டின் நிலையைப் பற்றி எடுத்துக் கூறினால்தான், பாமர மக்களும் நாம் ஆசைப் படுவதுபோல் மீண்டும் தமிழ்நாட்டில் செல்வம் தழைக்க வேண்டும், நல்லெண்ணங்கள் நிலைக்க வேண்டும் என்ற நினைப்பைப் பெறமுடியும். |
ஆனால் அரசாங்கம் இப்படித் தமிழனின் பண்டைப் பெருமையை எடுத்துக்கூறி இன்று மனதில் படர்ந்துள்ள மூடநம்பிக்கைகளை அகற்றுமாறு பகுத்தறிவு பிரசாரம் செய்வதை ஆபத்து என்று கருதுகிறது. பல்கலைக் கழகத்தில் பாடப்புத்தகங்களில் பகுத்தறிவு புகுத்தப்படுவதைத் தடை செய்கிறார் கல்வி மந்திரியார். மறைந்த வரலாற்றை மக்களுக்குக் கூறுவது சர்க்கார்க்கு வகுப்புத் துவேஷமாம். நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்; மாணவர்களை எங்களுடைய பிரச்சாரங்களை கேட்க வேண்டாம் என்று தடுத்தாலும், பல்கலைக்கழகத்தை மூடினாலும், பகுத்தறிவுக்குத் தடை விதித்தாலும், பிரச்சாரத்தைச் சட்ட விரோதமாக்கினாலும், அறிவுப் பஞ்சமே உண்டாக அரசாங்கம் ஏற்பாடு செய்தாலும், மண்டபங்களிலே, மாந்தோப்புகளிலே, மலைச்சரிவுகளிலே, மரநிழலிலே, பாதை ஓரத்திலே, நாங்கள் பிரச்சாரம் செய்வோம். எங்களுடைய குரல் எங்கும் எட்டித்தான் ஆகும். எங்களுடைய கருத்து யாருடைய மனதிலே படவேண்டாம் என்று கருதினார்களோ, அவர்களுடைய மனதிலே புகுந்தே தீரும். மூன்று அடுக்கு மேல்மாடியின் படிக்கட்டுகளைக் கட்டும் தொழிலாளி மனதிலே, தான் ஏழையாக |