பேருக்குக் கொடுத்தால் ஆளுக்கு எத்தனை மாம்பழம்?" என்று கணக்குப் போடுவோம். பிள்ளைகளோ மாம்பழம் ஆளுக்கு எத்தனை என்று யோசிப்பதைவிட மாம்பழத்தின் ருசி எப்படியிருக்கும் என்று யோசிப்பதில் நினைப்பை அதிகமாகச் செலுத்துவார்கள். ஆனால் இ்ப்படியல்ல, ஜெர்மனியில் பிள்ளைகளுக்குக் கணக்குப் போடுவது 4 டாங்கிகள்தான் நம்மிடம் இருக்கின்றன. எதிரியிடம் 8 டாங்கிகள் இருக்கின்றன. எப்படி இந்த 4 டாங்கிகளைக் கொண்டு எதிரியைத் தோற்கடிப்பது என்ற முறையில் கேள்வி இருக்கும். இன்னும் நிமிடத்திற்கு அறுபது மைல் வேகத்தில் செல்லும் விமானம், காலை 7 மணிக்கு இங்கிருந்து கிளம்பி இலண்டனில் குறித்த இடத்தில் குண்டு வீசிவிட்டு வரவேண்டுமானால் எத்தனை மணி பிடிக்கும் என்று கேள்வியிருக்கும். இத்தகைய கேள்விகள்தான் ஜெர்மனிய நாட்டில் இளைஞர்களுக்கு இராணுவத்திடம் ஆசையையும் நாசிசத்திடம் விசுவாசத்தையும் கொடுத்தன. இதைப்போல இராணுவப் படிப்பை, ஹிட்லர் கையாண்ட நாசிச முறையை நாம் கல்வியில் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. கல்வித்துறையில் போதனை மூலம் மக்களுடைய மனதை எப்பக்கத்திலும் திருப்பலாம் என்பதை வலியுறுத்தவே இதை நான் எடுத்துக் காட்டினேன். |
பாடத் திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்குப் பழமையிடத்திலுள்ள பாசம் குறையும். மனத்திலுள்ள மாசு நீங்கும். காலத்திற்குத் தக்கதுபோலக் கருத்துவளரும். அப்பொழுது மக்கள் உணவுப் பஞ்சத்தால் மடியும் பொழுது, சாந்தி பருவ ஆராய்ச்சி நடக்காது. மழையைப் பற்றிய ஆராய்ச்சி நடக்கும். சொற்பக் காலத்தில் விளையக் கூடிய பயிர்களைப் பற்றி ஆராய்ச்சி நடக்கும். ஆனால் பகுத்தறிவு, பாடப் புத்தகங்களில் நுழைவதைச் சர்க்கார் தடை செய்தால் நிச்சயம் சாந்தி பருவ ஆராய்ச்சிதான் நடக்கும். மேல் நாட்டார் நம் நினைப்பைக் கண்டு நகைப்பர். பரந்த தேசம்; மூன்று பக்கமும் கடல்கள்; ஒரு பக்கம் உலகம் போற்றும் இமயம்; நாற்பது கோடிக்கு மேல் மக்களைக் கொண்ட நாடு; மும்மூர்த்திகள் தோன்றிய நாடு; நால்வர் ஆழ்வாராதிகள் |