மண்ணுக்குரிய மக்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறும் பொழுது கொடுக்க வேண்டிய கடன் எத்தனையோ கோடி ரூபாய் - என்றால் இந்தியாவின் நிலை வேறு எந்த நாடும் உயரமுடியாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவே பொருள். ஆனால் நிலை உயர்ந்திருந்தும், நினைப்பு உயரவில்லை. சப்மரீனைப் பற்றி. டார்பிடோவைப் பற்றி, சந்திர மண்டலத்திற்குச் செல்லுவது பற்றிய நினைப்பில்லாமல், இந்திய சர்க்கார் சாந்தி பருவ ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள் என்று பத்திரிக்கையில் படித்திருக்கிறோமே அது நினைப்பு உயர்ந்திருப்பதைக் காட்டுகிறதா அல்லது தாழ்ந்திருப்பதைக் காட்டுகிறதா? ஏன் நினைப்பு தாழ்ந்திருக்கவேண்டும்? மனதிலே உள்ள தளைகள் நீக்கப்பட்டுவிட்டால் நினைப்பு இப்படிக் கெடுமா? படித்தவர்கள் மனதிலேயும் தளைகள் இருக்கின்றனவே! அவைகளை நீக்கப் பல்கலைக் கழகத்தார் என்ன திட்டத்தை வைத்திருக்கிறார்கள்? |
துணைவேந்தர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தால் நிச்சயமாக நான் அவரைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவரால் சட்டம் இயற்ற முடியும்; சர்க்காரையே உண்டாக்க முடியும். அவர் சர்க்காரின் கட்டுத்திட்டங்களுக்கு அடங்கிச் சர்க்காருக்காக மக்கள் நலனை மறக்கிறார். மாணவர்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை மறுக்கும் நிர்ப்பந்தத்திலிருக்கிறார். அவர் துணிந்து மாணவர்களுக்குப் பகுத்தறிவூட்டும் பாடத்திட்டத்தை வகுக்கலாம். வேண்டுமானால் சர்க்கார் அறிஞர் இரத்தினசாமியைத் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கலாம்; நீக்கட்டும். தமிழ்நாடு துணைவேந்தர் துணை நிற்கும்; கல்வி மந்திரியார் மனமிருந்தால் சரியான ஒரு திட்டம் வகுக்கலாம். மாணவர்களிடம் படிப்பு இருக்கிறது, படிப்பை பாமரர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது; ஆனால் திட்டம் வகுக்கப்படவில்லை. சமுதாயத்திற்கு உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலுள்ள மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பாமரமக்களுக்கு அறிவு புகட்ட வேண்டும். முன்னேற்றம், சமாதானம், சமதர்மம், பகுத்தறிவு ஆகிய அழகான வார்த்தைகளின் வாசனைகளை அவர்களும் நுகரும்படி செய்யவேண்டும். இதுதான் அறிவுப் பிரச்சாரம்; |