இருந்தாலும் "பிசாசாவது ஒண்ணாவது அதெல்லாம் பொய்" என்று சொல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், உடனே "ஆமாங்க, அப்படித்தான் இங்க ஒருவரு சொன்னாரு, நல்லாப் படிச்சவரு உங்களாட்டமே பேய், பிசாசுகளிடம் நம்பிக்கை இல்லையின்னு சொல்லுவாரு. ஒரு நாள் ராத்திரி அந்தச் சர்க்கார் சாவடியிலே படுக்கப் போகிறேன்னாரு, காலையிலே போய்ப் பார்த்தா செத்து கிடக்காரு. கத்தியால குத்தின மாதிரி வாயாலேயும் மூக்காலேயும் இரத்தம் வந்திருக்கு" என்று கிராமத்தார்கள் கூறுவார்கள். மாணவர்கள் மனதிலே அவர்களுக்குப் பிசாசிடம் நம்பிக்கை இல்லை என்றாலும், அல்லது பயமில்லை என்றாலும், கத்தியும் இரத்தமும் என்று கேட்டதும் அச்சம் தட்டும்; முகம் மாறுபடும், முகம் மாறுபடுவது மாத்திரமல்ல, கிராமத்து மக்களைப் பற்றி மாணவர்கள் மனதிலே கொண்ட நினைப்பும் மாற ஆரம்பிக்கும். ஏன்? அங்கு முதலியார்களைக் காண்பார்கள், படையாச்சிகளைக் காண்பார்கள். பறையர்களைக் காண்பார்கள், சாதி பேதமிருக்கும், சாஸ்திரிமார்கள் இருப்பார்கள். அங்குக் கோயில் குளங்களில் தீண்டாமை அனுஷ்டிக்கப்படும். கிராம மக்களின் நிலை நாம் நினைக்கிறபடி இருப்பதில்லை. நம் நினைப்புக்கும், அவர்கள் நினைப்புக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கும். கிராமத்து மக்களைப் பார்த்து மாணவர்கள் வயலைக் காட்டி அதில் என்ன பயிர் என்பார்கள். "அதாங்க, நெல் பயிர், சீரகச்சம்பா இது தெரியாதா? என்பார்கள். |
மாணவர்கள் மேலும் பல பயிர்களைக் காட்டி இது என்ன, அது என்ன என்று கேட்பார்கள். இது கருணை, இது சேனை, இது சீரகம், இது சோளம், இது முள்ளங்கி, என்று கிராமத்தார்கள் சொல்லுவார்கள். மாணவர்கள் கண்ணில் ஒருவித மிரட்சித்தோன்றும்."என்னங்க படிக்கிறேங்கிறிங்க, இதெல்லாம் தெரியலியே" என்பார்கள் கிராமத்தார்கள். மாணவர்கள் கிராமத்து மக்களிடம் பகுத்தறிவு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். கிராமத்து மக்கள் மாணவர்களிடம் சாவடிப் பிசாசைப் பற்றியும், கிராமத்துப் |