வியர்வையைப் பார்க்காமல் கஷ்டப்பட்டுக் கட்டிடம் கட்டியும் கடைசியில் அந்த உப்பரிகையில் உல்லாசமாக உலவப் போகிறவன் சீமான்; அவனல்ல. இந்த உண்மையைத் தொழிலாளியும் அறிவான். மாடிப் படிக் கட்டுகளைக் கட்டும்பொழுது, அதன் வழியாக ஏறி உலவப் போகிறவன் வேறொருவன்; தானல்ல என்பதைத் தெரிந்து கொண்டுதான் கட்டுவான். நிலைக்கேற்ற நினைப்பில்லை. திருட்டுத் தனமாகக் கனிதேடி மரம் ஏறியவனுடைய நினைப்பு எப்படியிருக்கும்? எந்த அளவுக்கு அவன் நிலை உயர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் நினைப்பும் தாழ்ந்திருக்கும். முதலில் கனிபறித்து, பிறகு அவசர அவசரமாகத் தோட்டத்துக்குச் சொந்தக்காரன் வந்துவிடுவானோ, வந்துவிட்டால் என்ன செய்வானோ என்ற பயத்தில் செங்காய்களைப் பறித்து, அதன் பின் காய்களையும் பறிப்பான். கனி பறிக்கையில் அவனது பாரத்தால் மரம் குலுங்கும்பொழுதெல்லாம் அவன் மனம் பயத்தால் குலுங்கும். அடிக்கடி தோட்டத்துக்குச் சொந்தக்காரன் வந்தால் எப்படிக் குதித்து எங்கு ஓடுவது என்று நினைப்பான். அவன் இருப்பது மரத்தின் உச்சியில்; ஆனால் அவன் மனம் இருப்பது தரையில்; இங்கும் நிலைக்கேற்ற நினைப்பில்லை. காரணம், எப்படி மூன்றாவது அடுக்கு மாடியில் உலவும் தொழிலாளிக்கு அந்த மாடி வீடு சொந்தமில்லையோ, அதுபோல மர உச்சியில் கனி பறிப்பவனுக்கும் அந்த மரம் சொந்தமில்லை. |