பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!47

என்று    கூறலாம். ஆனால் வாயில்லை. நேரே ஓடிப்போய் எல்லாம்
உருகுவதற்குள்  எடுக்கலாம்;  ஆனால்  கையில்லை. கதிரவன் இந்தக்
கையில்  ஊமையனின் கதியற்ற நிலையை அறியான். அவன் அவனது
வேலையைச்   செய்கிறான்.   அவன்   பிரபஞ்சத்திற்கும்  சொந்தம்.
காவலாளிக்குக்    கையில்லை;   வாய்   ஊமையே   தவிரக்   கண்
மாத்திரமிருக்கிறது.     இந்தக்     கோரக்    காட்சியைக்    காண.
அதைப்போலவே  கண்மாத்திரம்  இருக்கிறது.  கட்டழகியைக்  காண.
ஆனால்   சுயமரியாதை    இல்லாததாலோ,    சுதந்திர   உணர்ச்சி
இல்லாததாலோ   கையில்லை.   (கையில்   துணிவில்லை)   அவளது
கரத்தைப்பிடிக்க.   அந்த   வடிவழகியைக்   கண்டு   ஏதோ   பேச
வேண்டுமென்று  நினைக்கிறான்.  ஆனால்  சமுதாயக் கட்டுப்பாடுகள்
அவனது  வாயை  மூடி  விட்டன;  எவ்வளவு  அருமையாக ஒருவன்
ஒருத்தியைச்     சமுதாயக்    கட்டுப்பாடுகளால்    தொடமுடியாமல்
கஷ்டப்படுகிறான்   என்பதை   ஒரு  சிறு  அடியில்  விளக்குகிறார்.
"கையிலூமன் வெண்ணெய் உருகாது கண்ணால் பாதுகாத்தாற் போன்று"
என்று.
 

சங்க  இலக்கியங்களின் இன்பங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால்,
இன்று   முழுவதுஞ்  சொல்லிக்  கொண்டிருக்கலாம்.  சங்க  இலக்கிய
நுட்பத்தை   அனுபவிக்க  வேண்டிய  இடங்களை நமக்கு ஏற்ற எளிய
முறையில்    அளிப்பது   என்றால்  அந்தத்  துறையில்  பாரதிதாசன்
நாட்டுக்கும்     நமக்கும்   செய்துள்ள   தொண்டினை   மறந்தாலும்
மறக்கலாம்; ஆனால்  மறைக்க முடியாது. பாரதிதாசன் தரும் இலக்கியச்
சுவையை   அனுபவிக்க     இலக்கணம்   கற்றிருக்கவேண்டியதில்லை.
பாரதிதாசன்  பாக்களைப்  படித்தவுடன்  அவை  நமது இரத்தத்தோடு
இரத்தமாகக்   கலக்கின்றன;   உணர்ச்சி,    நரம்புகளிலே  ஊறுகிறது;
சுவைத்தால்   ருசிக்கிறது.   படிக்கிறோம்;   பாரதிதாசன்  ஆகிறோம்.
படிக்கிறோம்;  நாமும் பாடலாமா என்று  நினைக்கிறோம். படிக்கிறோம்;
'தமிழ்  எங்கள் உயிருக்கு நேர்' என்கிறோம்.  ஆனால், சில புலவர்கள்
அதிலே  இலக்கண  அமைப்பு  இல்லை  எனலாம். அஃது அவர்களது
ஓய்வுநேர வேலையாக இருக்கட்டும்.