பகுத்தறிவிற் கொவ்வாத ஏடுகள் இருக்குமானால் அவை குற்றம் என்று கருதப்பட்ட காலம். இதனால் அந்தக்காலத்திற்குத் தகுந்தாற்போல், அப்போது கவிதைகள் எழுந்தன. இடைக் காலத்திற்குத் தகுந்தாற்போல், இன்றைய வள்ளிகதை போன்றவை இயற்றப்பட்டன. இப்படி காலத்திற் கேற்றவாறு தான் கவிதைகள் இயற்றியிருக்கிறார்கள் என்றால் காலம் என்னும் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்ளாதவன் சிறந்த கவியாக மாட்டான். அவன் கோர்ட்களில் உள்ளவர்களைப்போல, ஒரு காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வைக்கும் ரிகார்டு பேர்வழி. அவன் அழகாக நெல்மணிகளைச் சேகரித்து மிராசுதாருக்குக் கொடுக்கும் பண்ணையாள். அவன் சிறந்த கவி யாகமாட்டான். சிருஷ்டி கர்த்தா வாகமாட்டான். எக்காலத்திலும் ஜீவித்திருக்கும் உயிர்க்கவி யாகமாட்டான். |
இடைக்காலக் கவிகளும் அதற்குப் பின்னால் ஏற்பட்ட அநேக கவிகளும் காலமெனும் சிறையிலே தங்களைத் தாங்களே ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் அதினின்றும் வர முயன்றால், அதைச் சுற்றி உள்ள மதமெனும் மண்டபச் சுவரை ஏறிக் குதிக்க வேண்டும். ஆதலால்தான் அந்தக் கவிகளுக்கு ஆண்டவனின் அவதார லீலைகளைப் பற்றியும், கயிலைக்கும் திருப்பதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், தேவாதி தேவர்களைப் பற்றியும் தேவாதி தேவன் கௌதமர் ஆசிரமத்திலே செய்த ஆபாசத்தைப் பற்றியும் எழுத எண்ணம் பிறந்ததே ஒழியக் காடுகளைப் பற்றியோ, மாடுகளைப் பற்றியோ, மலைகளைப் பற்றியோ, கவிதை செய்யவில்லை. செய்ய வில்லையா? அடாது! காலைக் கதிரவனைப் பற்றியும் மாலை மதியத்தைப் பற்றியும் பாட்டுக்களில்லையா? இதோ பார் என்று சொல்லலாம்; இருக்கின்றன. |