நாம் விதவைகளைப் பார்க்கிறோம், அவர்கள் பூவணியாத கோலத்தைப் பார்க்கிறோம்; அவர்கள் கன்னத்தில் வழிந்து காய்ந்துபோன நீரைப்பார்க்கிறோம். தேம்புதலைக் கேட்கிறோம். மமதையாளர் அவர்களுக்கு மணவாளர்களும் தேவையா என்று சொல்லுவதைக் கேட்கிறோம். அவர்களோ மாளவேண்டிய வயதில் காமரசம் பருகுவதற்காகக் கன்னிகைகளைத் தேடுவதைப் பார்க்கிறோம்; தாத்தாவுக்கு வாழ்க்கைப் பட்டபெண் தாழ்வாரத்திலே தனியே புரள்வதைப் பார்க்கிறோம்; அவளது கண்ணீர் தலையணையை நனைத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்; பார்த்துக் கருத்தை வெளியிடக் கவிதைகள் கட்டலாமா என்று நினைக்கிறோம். ஆனால், முடியவில்லை. கவிஞர் பாரதிதாசன் அதைக் கவிதையால் பாடுகிறார். பாடி. ‘இதைத்தானே தம்பி நீ பாட வேண்டுமென்று நினைத்தாய்?‘ என்று காட்டுகிறார். நாம் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். அவர் கவிதைகளிலே அந்த லோகத்தைப் பற்றியோ, அந்த வாழ்வைப் பற்றியோ இருக்காது. |
பட்டினத்தடிகள் காலத்திலிருந்துதான் மாய வாழ்க்கை பற்றி மக்கள் அதிகம் நினைக்க ஆரம்பித்தனர். ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே‘ என்ற மாயா வாழ்க்கைத் தத்துவம் இன்றும் உலவுகிறது. நாடகங்களிலே நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். அங்கிருந்து அரசன் வருவான். அரசனைப் பார்த்து ஒருவன் கேட்பான், ‘இந்த அரண்மனை யாருக்குச் சொந்தம்; இந்த நந்தவனம் யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டி யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டியிலுள்ள 20 லட்சம் யாருக்குச் சொந்தம்? என்று. அரசன், ‘யாருக்கும் சொந்தமல்ல‘ என்று சொல்லுவான். உண்மையிலே அவன் இறந்த பிறகு அவன் மகன் அனுபவிப்பான்; மகன் இல்லாவிட்டால் அவனது மருமகன் அனுபவிப்பான்; மருமகன் இல்லாவிட்டால் அவனது வாரிசுகளில் ஒருவன் அனுபவிப்பான். வாரிசுமில்லா விட்டால் தர்மகர்த்தாக்கள் அனுபவிப்பார்கள். தர்மகர்த்தாக்கள் இல்லாவிட்டால், நிரந்தர தர்ம கர்த்தாவாகிய நமது சர்க்கார் அனுபவிப்பார்கள். இதை |