அதனால்தான் நமது கவி பாரதிதாசன் இந்த லோகத்தைப் பற்றிப் பாடுகிறார். இந்த லோகத்தில் நீ பிறந்தது வாழ; வாழ என்றால் நிம்மதியுடன் வாழ; பிறரைச் சுரண்டாமல் வாழ; பிறரை வஞ்சித்தால்தான் வாழலாம் என்ற எண்ணமில்லாமல் வாழ; சுதந்திரமாய் வாழ என்கிறார். உருதிலே சிறந்த கவியான இக்பால் என்பவர் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது, அச்சமற்ற வாழ்க்கை தேவை என்றார். அச்சமற்ற வாழ்க்கை என்றால் அந்நியருக்கு அச்சமற்ற வாழ்க்கை; அறியாமைக்கு அச்சமற்ற வாழ்க்கை; சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமற்ற வாழ்க்கை, அந்த அச்சமற்ற வாழ்க்கையைத்தான் தமிழன் நடத்தவேண்டும். அதற்கு இடையூறாக எந்தக் கட்டுப்பாடுகள் வந்தபோதிலும், தூள்தூளாக்க வேண்டும் இதைத் ‘தாயின் மேலாணை, தமிழக மேலாணை, தூய என் தமிழ் மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கிறேன்‘ என்று அவர் பாட்டில் கூறுகிறார். அவர் கவிதைகளிலே இந்த லோகத்தைப் பற்றி, இந்த வாழ்வைப் பற்றி; வாழ்கின்ற முறையைப் பற்றிதான் இருக்கும். இதுதான் தேவை. |
அவன் ஏன் தூங்காமலும் வேலை செய்து கொண்டேயிருக்கிறான்; இவன் ஏன் கவலையில்லாமல் தூங்குகிறான்? அவாளவாள் பூர்வ ஜென்ம பலன், தாழ்ந்த ஜாதி என்ற ஒன்று ஏன் இருக்க வேண்டும்? உயர்ந்த ஜாதி இருக்கிறபொழுது தாழ்ந்த ஜாதி இருந்து தானே ஆகும் என்ற வேதாந்தங்களையும்-பிறந்தோம்; பரமன் இட்ட கட்டளையை அனுபவித்துத்தானே தீர வேண்டும் என்ற கோழை உள்ளங்களையுமே வளர்ப்பவை எந்த உருவத்தில் இருந்தால் என்ன? அந்தாதியாயிருந்தாலென்ன? அகவலா யிருந்தால் என்ன? இவை இருந்தால் என்ன? இறந்தால் என்ன? பிற்காலத்திற்குத் தேவையில்லை. தேவையில்லை என்று சொல்லுபவர்களைக் கலையின் விரோதிகள், கலை நிலை உணரா மக்கள் என்றும், தங்களையும் |