எச்சிலை வீழ்கிறது. சில நாய்கள் பாய்கின்றன. அந்த நாய்களுடன் இவர் கண்களும் பாய்கின்றன. ஆனால் ஆச்சரியப்படவில்லை. அடுத்தவிநாடி ஒரு வற்றிய மனித உருவம் வருகிறது. எச்சிலைகளின்மேல் பாய்கிறது. பாய்ந்து நாயைக் கல்லால்கூட அடிக்க வலுவில்லாமல் கையால் பிடித்துத் தள்ளுகிறது. தள்ளிவிட்டு, அந்த எச்சிலை உண்கிறது. நாய் சும்மா போக வில்லை. ஒரு கடி கடித்துவிட்டுப் போகிறது. இதைக் காணத் தம்பிக்கு ஆச்சரியம் மட்டுமல்ல, வேதனையும் பிறக்கிறது. தம்பி இந்தக் காட்சியை இன்னும் காணும்படியான இந்த நிலையிலே உள்ள, 'ஏ! பாரத நாடே' என்கிறார். கவிதை முடிகிறது. முடிக்கிறார் என்றால், எல்லோரையும் போல, "ஈசனே சிவகாமி நேசனே" என்று முடிக்கவில்லை ‘என் நாடே‘ என்று கவிதையை முடிக்கிறார். இன்று கவிதைகள் அப்படிப்பட்ட முறையிலே வெளிவர வேண்டும் என்கிறோம். |
பாரதிதாசன் பாக்கள் அத்தகையன; அதனால்தான் அவர் பாக்களை மாணவர்கள் போற்றுகின்றனர். அவரைச் சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவர் காரசாரமாகச் சாதியைச் சமயத்தைக் கண்டிக்கிறார் என்பதற்காக. பாரதிதாசன் வர்ணாஸ்ரமத்தைக் கண்டிக்கிறார். கண்டிக்கலாமா? சனாதனத்தைச் சாடலாமா? வகுப்பு வாதத்தை வளர்க்கலாமா என்று கேட்கின்றனர். வகுப்பு வாதத்தை அவர் வளர்க்கிறார் என்றால், வகுப்பு வாதம் இந்த நாட்டை விட்டுப் போகத்தான் - விட்டு விலகத்தான் பாரதிதாசன் பாடுகிறார். கவிதைகளைக் கவண்கற்களாக உபயோகப்படுத்துகிறார். அந்தக் கற்கள் வருணாசிரமத்தைக் தாக்குகின்றன. அது யாருக்குச் சொந்தமான கோட்டையாயிருந்தால் என்ன? அது யாருக்குச் சொந்தமான கொத்தளமாயிருந்தால் என்ன? தாக்கட்டும், தகர்க்கட்டும் என்கிறார். அந்தக் கோட்டைக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்க்கிறார்; அவர்களைத் தாக்குகிறார். |