பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!65

யாருக்கு வெட்கம், அணுகுண்டு சகாப்தத்திலே?
 

வைதிகத்தையும், மூடப்பழக்கத்தையும் வளர்க்கும் மாகாமகத்திற்குப்
போகாதே  என்று.  சுயமரியாதைக்காரன்  சொன்னான் என்பதற்காகக்
கல்கி,  மகாமகக்   குளத்தையும்,  அங்குக் குழுமியிருந்த மக்களையும்
படம்  பிடித்துக்   காட்டி,  "இதோ  பாருங்கள்.  சுயமரியாதைக்காரன்
காட்டுக்    கூச்சல்   போடுகிறானே.   எவ்வளவு   கூட்டம்   இந்த
நெருக்கடியான   காலத்திலும்?  இதிலிருந்து  அவர்களுக்குப்  பிரசார
பலமில்லை     என்று    தெரிகிறதல்லவா?"    என்பதன்    மூலம்
சுயமரியாதைக்காரனுக்கு  வெட்கம் என எழுதியது. யாருக்கு வெட்கம்?
முதலில்    கல்கி   ஆசிரியர்   தமக்கு   ஏற்பட்ட   அவமானத்தை
மறந்துவிடுகிறார்.  இந்த  அணுகுண்டு சகாப்தத்திலே, அழுக்கு நீரிலே
குளித்தால்   ஆண்டவனுடைய   அருளைப்   பெறலாம்   என்பதை
ஆதரிப்பது    போலல்லவா    நமது   படம்   இருக்கிறது   என்று
அவமானப்பட வேண்டியவர் அவர்தான்.
 

ஆகவே,  எதையும் சுயமரியாதைக்காரன் சொன்னான் என்பதற்காக
எதிர்க்காமல்,    மகாமகம்   மடமையை   வளர்க்கிறது   என்றவுடன்,
தினமணி    ஆதரித்து   எழுதட்டும்,   சுதேசமித்திரன்  தலையங்கம்
தீட்டட்டும்;  ஹிந்து  எழுதட்டும்; வேண்டு மென்றால் மதராஸ் மெயில்
மாத்திரம்  மகாமகத்தை   ஆதரிக்கட்டும்;  இந்த  நாட்டில் எவ்வளவு
காலம்     அறியாமை    நீடித்திருக்குமோ,    அவ்வளவு    காலம்
அவர்களுடைய  அந்நிய  ஆட்சி நீடித்திருக்கும் என்பதற்காகப் பத்து
வருடம்    சுயமரியாதைக்காரன்   சொல்வதை   ஏற்று   எழுதட்டும்;
எழுதாவிட்டாலும்    எதிர்க்காமலிருக்கட்டும்.    பாருங்கள்    பத்து
வருடத்திற்கு    பின்    இந்த   நாட்டிலே   ஜாதி   இருக்குமென்று
நினைக்கிறீர்களா?  அஞ்ஞானம்  இருக்குமா?  தீண்டாமை இருக்குமா?
எல்லாம் போன இடம் தெரியாமல் போய்விடும்.
 

ஒன்று பட்டாலுண்டு வாழ்வு
 

பாரதியார்கூட,     "ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை
நீங்கில்  அனைவர்க்கும் தாழ்வு" என்று கூறினார். இதைச் சொல்லியும்
- ஒரு கத்தைக் குச்சியை ஒடிக்க முடியாது;