பக்கம் எண் :

திருவள்ளுவரும்பிராமணியமும்-மதிப்புரை69

of South India to Indian Culture) என்னும் நூல், 1942-ல் காளிக் கோட்டப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்றது. அதன் 6ஆம் அதிகாரம் "குறள் - ஒரு பண்பியல் தமிழ் இலங்கு நூல்" (The Kural - A Characteristically Tamil Classic")என்னுந் தலைப்பினது, அதில், திருக்குறளை ஓர் ஆரியவழி நூலாகவும் திருவள்ளுவரை ஓர் இழிகுல மகனாகவும், தம்மால் இயன்ற அளவு காட்டியுள்ளார்ர் அதன் ஆசிரியர். அதைப் பொறுக்க மாட்டாத உண்மைத் தமிழ்மகனாரும் மானியருமான (M.) சோமசுந்தரம் பிள்ளை என்னும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், 1946-லேயே அதைக் கண்ட துண்டமாக நறுக்கிச் சின்னபின்னமாகச் சிதைத்து வரலாற்றிற்கும் உண்மைக்கும் ஏற்ப வன்மையாகக் கண் டித்துத், "திருவள்ளுவரும் பிராமணியமும்" (Tiruvalluvar and Brahminism) என்னும் தலைப்பில் ஓர் ஆங்கிலச் சுவடியை இயற்றினார். அஃது இதுவரை புதையுண்டு கிடந்தது. இன்று தெள்ளிய தமிழறிஞரும், தேற்றிப் போற்றும் அருநூற் களஞ்சியரும், தமிழ்ப் பேராசிரியர்க்கெல் லாம் வழிகாட்டும் மொழித் தொண்டரும், கோடி பெறினுங் குன்றுவ செய்யாக் குடிப்பிறந்தாரும், உலகத் தமிழ்க் கழக நெறியீட்டுக் குழு வுறுப்பினரும், காஞ்சிப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலை வரும், ஆகிய பேரா. கோ. "இராமச்சந்திரன்" என்னும் நிலவழகனாரால் அது, சுந்தரம் பிள்ளை, பூரணலிங்கம் பிள்ளை, மறைமலையடிகள், கா.சுப்பிரமணியப் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், துடிசைக்கிழார் முதலிய தமிழச் சான்றோர் இல்லாக் காலத்தில், ஆரிய அடிமை நோய்க்கு அருமருந்தாக எளிய விலைக்கு வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளின் பொருட்டமிழ்மையை எவரும் மறுக்கொணாச் சான்று காட்டி ஏரண முறைப்படி நிறுவும் இந் நூல் நெடுங்கால வுறக்கந் தெளியும் இற்றைத் தமிழனுக்கு மிகமிக வேண்டியதாம். இதை, ஆசிரியர்,

1. பர். (Dr.) எசு. (S.) கிருட்டிணசாமி ஐயங்கார் பொத்தகத்தி னின்று எடுத்த பகுதி (Extract from Dr. S. Krishnaswamy Iyengar"s Book.)

2. திருக்குறளும் பிராமண வாழ்க்கையின் நானிலையும் (The Kural and the Four Stages of the Brahminical Divisions of Life),

3. பரிமேலழகர் திருவள்ளுவரைப் பிறழவுணர்ந்தமைTiruvalluvar Misunderstood by Parimel-Alagar),

4. வரலாற்றாசிரியர் திருவள்ளுவரைத் தவறாகக் காட்டியுள்ளமை (Tiruvalluvar Misrepresented by the Historian),

5. திருக்குறளும் தென்னிந்திய இந்துக் குமுகாயமும் (Kural and the Hindu Society of South India),

6. அருத்தசாத்திரத்திற்குத் திருவள்ளுவர் கடப்பாடு (Tiruvalluvar"s Indebtedness to Artha Sastra),

7. திருவள்ளுவரும் அவர் குலமும் (Tiruvalluvar and His Caste).