பக்கம் எண் :

81

10

கலைஞர் நூல் வெளியீட்டு விழா

நம் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் மாண்புமிகு கருணாநிதியார் என்னும் அருட் செல்வனாரின் பொன் விழாவையொட்டி அவர்கள் எழுதியுள்ள "ரோமாபுரிப் பாண்டியன்" என்னும் புதினமும், "மேடை யிலே வீசிய மெல்லிய பூங்காற்று" என்னும் ஒரு கட்டுரைத் திரட்டும் ஆகிய இரு புத்தகங்களின் அரங்கேற்ற விழா அல்லது வெளியீட்டு விழா இன்று நிகழ்கின்றது.

அந்த இரு நூல்களில் "ரோமாபுரிப் பாண்டியன்" என்னும் புதினத்தை நம் ஓய்வு பெற்ற தலைமை நடுவர் உயர்திரு அனந்த நாராயணன் அவர்கள் வெளியிடுவார்கள். அதைப் பாவரசு கண்ண தாசன் அவர்கள் பெறுவார்கள். அதன் பின்பு அந்தக் கட்டுரைத்திரட்டை மாண்புமிகு புலவர் கா. கோவிந்தனார் வெளியிடுவார். அதைப் பெரும் புலவர் கி. வா. சகந்நாதன் பெறுவார். இப்போது இந்த "ரோமாபுரிப் பாண்டியன்" என்கின்ற புதினத்தைப் பற்றிச் சிறப்பாக ஒன்றும் பேச வேண்டுவதில்லை. ஏனென்றால் பேசுவதற்கு ஒரு பெருஞ் சொற் கொண்டல் இங்கே காத்திருக்கின்றது.

அது ஒரு புதினம்; அதாவது நாவல். வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மிகத் திறம்பட எழுதப்பட்ட ஒரு புதினம். ஒரு புது விரிவான கதை. ரோமாபுரித் தொடக்கத்தில் இருந்து அந்தக் கதை எடுத்துக் கூறுகின்றது. அது கி. மு. 753 என்று சொல்லப்படுகின்றது. இதை நினைக்கும் போது ஒரு சிலர் அதாவது ஆராய்ச்சி இல்லாதவர்கள் இவ்வளவு-பழமையானதா என்று கூடச் சற்று வியக்கலாம்.

ஆனால் தமிழ் அதற்கும் முந்தினது. இந்த ரோமாபுரியோடு தமிழ்நாடு வணிகத் தொடர்புடையது மட்டுமன்று. இன்னும் சொல்லப் போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது. அந்த வணி கத்தினால் இணைக்கப்பட்ட சில பொருட்களின் பெயர்கள் மட்டுமல்ல. அந்த மொழியிலே பல அடிப்படைச் சொற்களே தமிழாக இருக்கும். அவற்றை எல்லாம் இப்போது சொல்ல நேரமில்லை. வேறு சமயம் வாய்க்கும்போது சொல்வேன். ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கின்றார்கள். ஒரு புதினம் என்கிற காவியம் எழுதப்படும்போது அந்தக் கதையானது நான்கு வகையாகப் பிரித்துச் சொல்லப்படும்.