கொட்டாரம் = வட்டமான களஞ்சியம், களஞ்சியமுள்ள புறக்கடை, புறக்கடை. இன்றும் நெற்கூடுகள் வட்டமாகவே கட்டப்படுகின்றன. கொள்-கொடு-கொடுமை = வளைவு, நீதிநெறியினின்று கோணிச் செய்யும் தீங்கு. கொடுமையுடையார், கொடியார். கொடுங்கோல் = வளைந்த கோல், வளைந்த கோற்போல் நீதிநெறியினின்று கோணிய ஆட்சி. கொடுந்தமிழ் = இலக்கணநெறியினின்று கோணிய தமிழ். கொடுக்காய் = வளைந்த காய். கொடுக்காய்ப் புளி, கோணப் புளியங்காய் என்னும் சொற்களை நோக்குக. கொடு - கொடுக்கு = வளைந்த முள்ளுறுப்பு. கொடுக்கு - E. crook; W. croog; F. croc. ட - ர, போலி. எ-டு: படவர் - பரவர், முகடி - முகரி.கொடு - கொடி = வளைந்த தண்டுள்ள செடி.கொடு-கொடி = வளைவு. "கருங்கொடிப் புருவத்து" (மணிமே.3:119).கொடு - கொடி = கதிரவன் எழுந்து வளையும் கிழக்கு.கொள் என்பதன் நேர்மூலம் குள்.குள் - குண் - குணம் = வளைவு, கதிரவன் எழுந்து வளையும் கிழக்கு.குணம் - குணகு - குணக்கு = வளைவு, கிழக்கு.குணகுதல் = வளைதல். "நாய்வாலைக் குணக்கெடுக்கலாமா?" என்பது பழமொழி.குணக்கு - குணுக்கு = காதுவளையம்.குணம் - குடம் = வளைவு, கதிரவன் வளைந்துவிழும் மேற்கு, உருண்ட கலம்.குடம் - கடம்(வ.).குடம் - குடந்தம் = வளைவு, வணக்கம்(உடல் வளைவு), வழிபாடு."குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி"(திருமுருகு. 229)குடம் - குடா = வளைந்த கடல். குடாவடி = வளைந்த பாதம்.குடம் - குடி = வட்டமான அல்லது வளைந்த குடியிருப்பு, வீடு, வீட்டுத் தொகுதியாகிய சேரி அல்லது ஊர், வீட்டிலுள்ள மனைவி, மனைவியோடு தொடங்கும் குடும்பம், குடும்பத்தின் பெருக்கமான குலம், வீட்டுவாசம், வீட்டுவாசி. வளைந்த புருவம்(பிங்.).குறிஞ்சி நிலத்தூர் சிறுகுடி எனப்படும். காரைக்குடி மன்னார்குடி எனப் பல வூர்ப்பெயர்கள் குடி என்னுஞ் சொல்லை ஈறாகக் கொண்டுள்ளன.ஏழை மக்கள் சிலர் மூங்கில் தட்டியை வளைத்த கூண்டுகளையே குடியிருப்பாக வைத்துக்கொண்டு வாழ்வதை இன்றுங் காணலாம். |