பக்கம் எண் :

மொழிநூல்109

      மூன்றாவது, வயிரக் கற்களின் உயர்தாழ்வை மணிநோட்டகன் கண்ணே காண்பதுபோல், சொற்களின் வேரையும் பொருட் கரணியத்தையும் மொழிநூல் வல்லான் அகக்கண்ணே காணுமென்றும், அறிவொடு உயிருமற்ற அஃறிணைக் கருவிகள் காணாவென்றும், அறிதல் வேண்டும்.
      தோகை என்னும் சொற்குத் தொகு (தொங்கு) என்பதும், விரல் என்னும் சொற்கு விரி என்பதும் வேரன்று, கால்டுவெலார் கண்டுபிடித்ததும் borough என்னுஞ் சொற்கு bergan (to protect) என்பதும், snake என்னுஞ் சொற்கு snican (to creep) என்பதும் மூலமென்று ஆங்கில அறிஞர் கண்டறிந்ததும்; உயர்திணை மதியினாலா அஃறிணைக் கருவியினாலா?
      புல்-புள்-புழு-புழல்-புடல்-புடலை. மே-மேய்-வேய்-வேய்ந்தான்-வேந்தன்-வேந்து, என்னும் சொல் வரலாறுகளை எவர் மறுக்கவியலும்? இவை உண்மை நவிற்சியா, உன்னிப்பு நவிற்சியா?
      பர். பரோவும் பர், எமெனோவும் மொழிநூல் வல்லாரும் தென்மொழியாராய்ச்சித் திறவோருமேனும், தமிழ்ப் பற்றற்ற பிராமணத் தமிழ்ப் பண்டிதர் தொகுத்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியையும் பர்.சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியக் குறிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டமையாலன்றோ, அவர்தம் திரவிட ஒப்பியல் அகரமுதலியில் மோள் (சிறுநீர்விடு) என்னும் தமிழ்ச்சொல்லைக் குறியாது விட்டதும், தகப்பன் (தம்+அப்பன் -தமப்பன் - தகப்பன்) என்னுஞ் சொல்லைத் தகு+அப்பன் என்று தவறாகப் பிரித்ததும், ஆயிரம் என்னும் தூய தென்சொல்லை ஸகஸ்ர என்னும் வடசொல்லினின்று திரித்ததும்
      இனி ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப என்னும் தமிழ் மெல்லிசை மெய்யிணைகளை முறையே nka, nca, nta, ntha, mpa என்று அவர் ஆங்கிலத்தில் வல்லிசை மெய்யிணைகளாக வரிபெயர்த்து (Transliteration) அறிவியன் முறைப்பட்டதாகுமோ?
(3) இளைஞர் மயக்கம்
     இற்றை யறிவியல்களெல்லாம் மேனாடுகளிலேயே தோன்றிவளர்வதனாலும், சில போலித் தமிழறிஞரான ஆரிய அடிமையர் அதிகாரப் பதவிகளிலிருந்து கொண்டு தமிழைக் காட்டிக்கொடுப்பதினாலும் ஆராய்ச்சியில்லா ஆசிரியரும் மாணவருமான இளைஞர் உண்மையறிய வியலாது மயங்கித் தியங்குகின்றனர்.