3. சீமையராட்சி வகைகள் சீமை என்பது, (1) நகரச் சீமை ( City State ) (2) இனச் சீமை ( Nation State ) (3) தேயச் சீமை ( Country State ) (4) கூட்டுச்சீமை ( Federal State) என நால்வகையாகக் கூறப்படும். ஒரே பேரூராயிருப்பது, அல்லது ஒரே நகரமும் அதனைச் சார்ந்த சிற்றூர்களும் சேர்ந்தது நகரச்சீமை; ஒரேயின மக்கள் வாழும் நாட்டுச் சீமை இனச்சீமை; பல இனமக்கள் வாழும் நாட்டுச் சீமை தேயச் சீமை; பல நாடுகள் சேர்ந்தது கூட்டுச் சீமை. சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றும் ஓரின மக்களையே கொண்டனவாயும், வெவ்வேறு அரசின்கீழ்ப்பட்டனவாயும் இருந்த தினால், அவற்றை ஆங்கில நிலச்சீமை( Territorial State ) என அழைக்கலாம். அகப்பொருட் செய்யுட் கிளவித்தலைவர், வெற்பன் குறும் பொறைநாடன் ஊரன் துறைவன் விடலை எனக் குறுநிலத் தலைவராகவும் தனியூர்த் தலைவராகவுமே குறிக்கப் பெறுவதால், சேர சோழ பாண்டியவரசுகள் தோன்றுமுன் நகரச் சீமைகளே தமிழகத்திலிருந்தன எனக் கொள்ள இடமுண்டு. அரசு அல்லது அரசியல் என்பது, (1) கோவரசு ( Monarchy ) (2) குடியரசு ( Democracy ) (3) சீரியோரரசு( Aristrocracy ) என மூவகைப்படும். கோவரசை முடியரசு என்றுங் கூறலாம். முத்தமிழரசுங் கோவரசாகும். பிற்காலத்தில் பார்ப்பனச் செல்வாக்கு மிக்கிருந்ததி னால், அதை ஒருவகைப் பார்ப்பனச் சீரியோரரசு( Brahmin Aristrocracy ) என்னலாம். தமிழ்க்கோவரசு பெரும்பாலும் செங்கோலாட்சியாகவும் ( Righteous Government ) சிறுபான்மை கொடுங்கோலாட்சியாகவும் ( Despotic Government ) இருந்தது. இரண்டும் முற்றதிகாரக் கோவரசே |