பக்கம் எண் :

108பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

"தென்னோங்கு தில்லைச் சிவப்பிரகா சப்பெருமான்
பொன்னோங்கு சேவடியைப் போற்றினோம் - அன்னோன்
திருக்கூட்டம் அத்தனைக்கும் தெண்டனிட்டோம் தீராக்
கருக்கூட்டம் போக்கினோம் காண்"

என்று கடுத்துப் பாடினமை காண்க. கடுத்தல் - விரைதல்.

   புகழேந்திப் புலவர் காலமான 14ஆம் நூற்றாண்டில், உழவன், கொல்லன், தட்டான், தச்சன், மஞ்சிகன் (முடிதிருத்தாளன்) முதலிய பல்வகைத் தொழிலாளரும் சிறந்த செய்யுள் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தமையால், பண்டைக்காலக் கல்விப் பரப்பு அறியப்படும், ஆறலைக்கும் கள்வர்கூட அக்காலத்திற் கற்றுவல்ல பாவலராயிருந்திருக்கின்றனர்.

   இக்காலத்திற்போல் கல்வித்துறை என்னும் அரசியல் துறை அக்காலத்தில்லை. மக்கள் தனிப்பட்ட முறையில், ஆசிரியனுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் கற்று வந்தனர்.

"உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"
(புறம்.183)

 
என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியிருத்தல் காண்க.

   கற்பிப்போர் கணக்காயன் என்றும், ஆசிரியன் என்றும், குரு அல்லது குரவன் என்றும் மூவகையர். கணக்காயன் எழுத்தும் சிற்றிலக்கியமும் உரிச்சொல்லும்(நிகண்டும்) கணக்கும் கற்பிப்போன்; ஆசிரியன், பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவிலக்கணமும், அவற்றிற் கெடுத்துக்காட்டான பேரிலக்கியமும் கற்பிப்போன்; குரவன் சமயநூலும் பட்டாங்கு (தத்துவ) நூலும் கற்பிப்போன்.

   இள மாணவ மாணவியர்க்குக் கணக்கை மிகுதியாகக் கற்பிப் பவன் கணக்காயன்.

ஐயன் - ஆயன் = ஆசிரியன்.
ஆயன் - ஆயான் = தந்தை, தமையன்.
ஆயான் - ஆஞான் = தந்தை.
ஆயான் - ஆசான் = மூத்தோன்,ஆசிரியன்,
ஆசாள் = ஆசிரியன், மனைவி,தலைவி.

   ஆசு + இரியன் - ஆசிரியன் = குற்றம் நீங்கியவன் அல்லது குற்றங்கெடச் சொல்பவன். ஆசு - குற்றம். இரிதல் -இரிஞன் = பகைவன். ஒ.நோ: கலையன் - கலைஞன். ஆசிரியரும் நூலாசிரியர், நுவலா சிரியர், உரையாசிரியர் என மூவகையர். நுவலுதல் கற்பித்தல். முதலிரு கழக நூலாசிரியரும் தம் நூல்களில் அகவற்பாவையே ஆண்டமையால், அப் பாவிற்கு நூற்பா, அகவல், ஆசிரியப்பா என்னும்