பக்கம் எண் :

118பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்து. அது பொருள், கதை(யோனி), தலைமை (விருத்தி), நிலை (சந்தி), சுவை, வகுப்பு (சாதி), குறிப்பு, விறல் (சத்துவம்), நளிநயம் (அபிநயம்), சொல், சொல் வகை, வண்ணம், வரி,சேதம் என்னும் பதினான் குறுப்புகளை யுடையது.

   நாடக அரங்கு நல்ல கெட்டி நிலத்தில், ஈரடி நீளமுள்ள கோலால், எண்கோல் நீளமும் எழுகோல் அகலமும் ஒருகோல் உயரமும் உள்ளதாக அமைக்கப்பட்டு,மேலே முகடும், ஒருமுக வெழினி பொருமுக வெழினி கரந்துவர லெழினி என்னும் மூவகைத் திசைகளும், புகுவாயில் புறப்படவாயில்
(Exit) என்னும் இருவாயில் களும், உடையதாயிருந்தது.

   தமிழ் நாடகமெல்லாம் இசைப்பட்டுள்ளவையே
(Operas) .

   நாடகம் என்பது நாட்டக்க என்றும், அரங்கு அரங்கம் என்பன ரங்க என்றும், வடமொழியில் திரியும்.

   அர் - அரங்கு = அறை, அரங்கு - அரங்கம் = நாடக மேடை, நாடகசாலை, விளையாடிடம், படைக்கலம் பயிலுமிடம், போர்க் களம், ஆற்றிடைக் குறை, திருவரங்கம்.
இசை நாடகம் என்பவற்றின் விரிவை என் முத்தமிழ் என்னும் நூலிற் கண்டுகொள்க.

(3) மடைநூல்

மடை = சோறு, உணவு. மடைநூல் சமையல் நூல்.
"கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும்" (மணிமே.2:22)
என்பது தமிழில் மடைநூலிருந்தமையைத் தெரிவிக்கும்.
"காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்"
(சிறுபாண்.238-41)

என்று சிறுபாணாற்றுப்படைகூறும் வீமன் மடைநூல், தமிழ் மடை நூலைத் தழுவியதேயென்பது அதன் பின்மையாலும், அவன் பாண்டியர் குடியான திங்கள் மரபினனா யிருந்தமையாலும். அறியப்படும். நளனும் திங்கள் மரபினனே.

(4) மருத்துவம்
தமிழ் மருத்துவக் கலை சித்தரால் வளர்க்கப்பெற்றது. அதனால் அது சித்த மருத்துவம் எனப்பெறும். கட்டிகளையும்