| அவ் வுறுப்புகளின் வடிவு, நிறம் முதலியவற்றைக்கொண்டும்; மக்களின் இயல்புகளையும் அவர்க்கு நேரும் இன்ப துன்பங்களையும் எடுத்துக் கூறுவது உடற்குறி நூலாகும். கைவரி நூல் (Palmistry) ஒரு தனி நூலாய் வழங்கிவரினும், அது உடற்குறி நூலின் ஒரு பிரிவே. இளங்கோவடிகளின் உடற்கூற்றைக் கண்டு அவருக்கு அரசாளும் திருப்பொறி யுண்டென்று குறிகாரன் கூறியது, உடற்குறி நூல் தழுவியே. "நுந்தை தாள்நிழல் இருந்தோய் நின்னை அரைசுவீற் றிருக்கும் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்" (சிலப்.30: 174-6) என்று இளங்கோவடிகள் பத்தினித் தெய்வக் கூற்றாய்க் கூறுதல் காண்க. ".............................................நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை" (முல்லைப். 2-3) என்பது கைவரியையும், "எழுமரங் கடுக்கும் தாள்தோய் தடக்கை" (புறம். 90:10) என்பது கைவடிவளவையும், "செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்" (சிலப்.11:184) என்பது கண்ணிறத்தையும் குறிக்கும் உடற்குறி நூற் சான்றுகளாம். (13) புள்நூல் வல்லூறு, ஆந்தை, காகம், கரிக்குருவி, காடை முதலிய பறவைகளின் குரலையும் இயக்கத்தையும் கொண்டு, வரப்போகும் நன்மை தீமைகளைக் கணித்துக் கூறுவது புள்நூல். புள் பறவை. புள்ளால் அறியப்படும் குறியைப் புள் என்பது ஆகுபெயர். வழிச்செல்வார் வாயினின்று தற்செயலாய் வரும் சொல்லைக் குறியாகக் கொள்வது, வாய்ப்புள் எனப்படும். உடம்பின் பலவுறுப்புகள் துடிப்பதைக் கூறும் துடிநூலும், கட்டு என்னும் நெற்குறியும், கழங்கு என்னும் காய்க்குறியும் , ஏதேனும் ஓர் ஏட்டைத் தொடும் தொடுகுறியும், எண்குறியும், பெயர்க்குறியும், நின்ற நிலைக் குறியும், கவடிக்குறியும், கண்ட காட்சிக் குறியும், நேர்ந்த நிகழ்ச்சிக் குறியும், சொன்னசொற் குறியும், கோடிழைத்தற்குறியும், மூச்சுவிடற் குறியும். தேவராளர்குறியும், விரிச்சிக்குறியும், (Oracle) இரண்டிலொன்றன் குறியும், பல்வேறு |