இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே...... .......................................................................... நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை யிகழ்தல் அதனினும் இலமே." (புறம்.192) இது, "எந்தவூரும் சொந்தவூர்; எல்லாரும் உறவினர்; ஒருவரின் இன்ப துன்பத்திற்கு அவரே கரணியம் (காரணம்); வாழ்விலும் தாழ்விலும் ஒத்திருக்க வேண்டும்; எல்லாம் ஊழால் நடப்பதால் பெரியோர் சிறியோர் என்னும் வேறுபாடு காட்டக் கூடாது." என்று சில சிறந்த பண்பாட்டுக் கருத்துகளைக் கணியன் பூங்குன்றனார் தெரிவித்தது. ஊழை வினைப்பயனென்றும் இறைவன் ஏற்பாடென்றும் இயற்கையென்றும், மூவேறு வகையிற் கொள்வர். "மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே எம்மால் வியக்கப் படூஉ மோரே இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு புன்பல வரகின் சொன்றியொடு பெறூஉம் சீறூர் மன்ன ராயினும் எவ்வயின் பாடறிந் தொழுகும் பண்பி னாரே மிகப்பே ரெவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம் நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே." (புறம்.197) இது, "நாற்பெரும்படைப் பெருநாட்டு வேந்தராயினும் பண் பில்லாரை மதியோம்; சிற்றூர் மன்னராயினும் பண்புடையாரை மதிப்போம்; அறிவிலிகள் செல்வத்தை நினையோம்; அறிவுடையார் வறுமையையே நினைப்போம்." என்று மாடலன் மதுரைக் குமர னார் பாடியது. "ஈயென இரத்தல் இழிந்தன் றதன்எதிர் ஈயேன் என்றல் அறனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன் றதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்த்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச் |