பக்கம் எண் :

16பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

வழக்கற்றுப் போனபின், நகை என்னும் தொழிற்பெயர் முதனிலை யாய் வழங்குவது போன்றதே கனி என்னும் முதனிலையும். பூப்பு என்னும் சொற்போன்றே, கன்னுதல் என்பதும் நிலைத்திணைக் குரியதாயிருப்பதும், mature என்னும் ஆங்கில வழக்கும், இங்குக் கருதத்தக்கன.

மூவேந்தர் குடிப்பெயர்

   பழங்குடி என்னும் சொற்கு, சேர சோழ பண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வருங்குடி என்று, பரிமே லழகர் உரைத்தற் கேற்ப,

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்" (செய். 78)

   என்று தொல்காப்பியரும் மூவேந்தர் குடித் தொன்மையையும் சிறப்பையும் குறிப்பிட்டுள்ளார்.

   முதற்காலத்தில் முடியணியும் உரிமை சேர சோழ பாண்டி யர்க்கே யிருந்ததால், அவர் தலைமையாயிருந்த காலமெல்லாம் கடைக்கழகக் காலத்திற்கு முன்னரேயே. குறுநில மன்னர் பலர் மூவேந்தர்க் கடங்காமையை, கடைக்கழகப் பனுவல்களும் பாடல் களும் தெரிவிக்கின்றன. அதன்பின். களப்பாளர் (களப்பிரர்) ஆட்சி யும் பல்லவர் ஆட்சியும் பிறமொழியாளர் ஆட்சியும் இடையிட் டிடையிட்டு வந்துவிட்டன.

   ஆரியர் வருமுன், நாவலந்தேயம் முழுதும் மூவேந்தர் நேரடி ஆட்சிக்குட்படாவிடினும் அதிகாரத்திற்குட்பட்டிருந்தது. மதி, கதிரவன், நெருப்பு ஆகிய முச்சுடரையும், முறையே, பாண்டியரும் சோழரும் சேரருமே தம் குலமுதலாகக் கொண்டிருந்தனர்.

பாண்டியன்

மூவேந்தருள்ளும் பாண்டியன் முந்தியவன் என்பது,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
 குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
 வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
 தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"
(சிலப்.11:19-22)

என்னும் இளங்கோவடிகள் கூற்றுத் தெரிவிக்கும். இதனாலும், பழையன் என்று பெயர் பெற்ற இரு குறுநில மன்னர் இருந்த தாலும், பாண்டியன் என்னும் பெயரைப் பண்டு என்னும் சொல் லினின்று திரிப்பர். ஆயின் காளையைக் குறிக்கும் பாண்டி அல்லது, பாண்டியம் என்னும் சொல்லினின்று அப் பெயர் வந்ததாகக் கொள்வதே மிகப் பொருத்தமாம்.