"சான்றோர் புகழு முன்னர் நாணுப" (குறுந்.252) என்பது,அறிஞர் புகழ்ச்சியை விரும்பாமையைத் தெரிவிக்கும். "புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி கல்லா வொருவன் உரைப்பவுங் கண்ணோடி நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து" (நாலடி. 155) என்னும் நாலடிச் செய்யுள், கல்லாத ஒருவன் ஓர் அவையில் பொருளற்ற வுரை நிகழ்த்தினாலும், அவன் பலர்முன் வெட்கப் படுவதற்கு இரங்கி, வருத்தத்தோடும் அறிஞர் கேட்டுக் கொண்டிருக்கும் பண்பாட்டைத் தெரிவிக்கின்றது. சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந் தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்றனாக வந்தானென்று கொல்லப்புகும் போது, கோவூர்கிழார், "வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி" (புறம்.47) என்னும் பாட்டைப் பாடி,அப்புலவனைத் தப்பிவித்தார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமானின் இரு குழந்தைகைளை யானை மிதித்துக் கொல்லும்படி இடப் புகுந்தபோதும், கோவூர்கிழாரே "நீயே, புறவின் அல்ல லன்றியும்" என்னும் பாட்டைப் பாடி (புறம்.46), அக் குழந்தைகளைத் தப்புவித்தார், அக்காலத்துப் புலவர் அரசரையடுத்து, அரசியல் தவறுகளை எடுத்துக்காட்டி அவற்றைத் திருத்தவும், பொதுநலத் திட்டங்களை வகுத்துக் கொடுத்து அவற்றை நிறைவேற்றவும், அறிவுரை கூறி வந்தனர். "காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே." (புறம். 184) இது, பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறிய அறிவுரை. |